பொலிவு பெறும் மீனாட்சி அம்மன் கோவில்
சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இயற்கைத் தன்மை மாறாமல் கோவில் அழகுபடுத்தப்படும் என்று சட்டசபையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்விநேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலளிக்கையில், மீனாட்சி அம்மன் கோவில்களின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்யும் பணிக்காக அரசு ரூ. 5 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கோவிலின் கலை மற்றும் சிற்பங்கள் பாழ்படாமல் பாதுகாக்கப்படும்.
இதுதவிர கோவிலில் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான மராமத்து பணிகளும் ஆறு மாதத்திற்குள் முடிக்கப்படும்.
கோவிலின் மேற்கூரைகளில் உள்ள விரிசல்கள் நீக்கப்படும். அவற்றுக்குப் பதில், புதிய கற் கூரைகள் பொருத்தப்படும். இந்தக் கூரைகள், பெங்களூரிலிருந்து கொண்டு வரப்படவுள்ளன.
மேலும், கோவிலின் புகழ் பெற்ற தங்கத் தாமரைக் குளம் நிரந்தரமாக நீரால் நிரப்பப்படும். அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
மேலும் மழைக்காலத்தில் கிடைக்கும் மழை நீரை உபயோகமான முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நிரந்தர மழை நீர் வடிகால் வசதியை கோவிலைச் சுற்றிலும் ஏற்படுத்துவற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய 9 என்ஜீனியர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் கோவிலுக்குள் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார் பெரியகருப்பன்.