காமராஜர், சரத்குமார் கட்-அவுட் மீது சாணம் வீச்சு: பதற்றம்
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே காமராஜர் மற்றும் சரத்குமார் கட்-அவுட்கள் மீது சாணம் வீசப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
நெல்லை அருகே முக்கூடலில் உள்ள புனித சின்னப்பர் ஆலய திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடக்கும். அதில் பல ஆரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழாவுக்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு கட்-அவுட்கள் வைக்கப்பட்டன.
நேற்று நள்ளிரவில் அந்த கட்-அவுட்கள் மீது யாரோ மர்ம நபர்கள் சாணியை வீசி அவமரியாதை செய்துள்ளனர்.
இன்று காலை இதை கண்டு கொதித்துப் போன அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் இந்த கேடுகெட்ட செயலைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முக்கூடல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் பஸ் நிறுத்தப்பட்டது.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளைப் பிடிப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இச் சம்பவம் குறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.