போலி தடுப்பூசி முகாம் நடத்திய வாலிபர்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே போலியாக தடுப்பூசி முகாம் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களின் புறநகர் பகுதிகளில் போலி மருத்துவர்கள் புற்றீசல் போல் பரவியுள்ளனர்.
இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த ஒரு கும்பல் கிராமம் கிராமமாக சென்று மஞ்சள் காமாலை, டைபாய்டு மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு போலியாக மருத்துவ தடுப்பூசி முகாம் நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
நெல்லை டவுனை சேர்ந்த அந்தக் கும்பல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று முறையாக அரசின் அனுமதி பெறாமல் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி, டைபாய்டு, மூளைக்காய்ச்சல், போன்றவற்றிக்கு போலியாக தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது.
தடுப்பூசி முகாம் நடத்துபவர்கள் அந்தந்த சுகாதார பணிகள் துணை இயக்குனரின் அனுமதி பெற்று பயிற்சி பெற்ற டாக்டர் முன்னிலையில் பயிற்சி பெற்றவர் தடுப்பூசி போட வேண்டும். ஆனால் இந்த கும்பல் அனுமதி பெறாமல் முகாம்களை நடத்தி வருகின்றனர்.
இதற்காக ஒரு டிரஸ்ட் பெயரில் அட்டை வைத்து கொண்டு அதை கிராமங்கள்தோறும் கொடுத்து பதிவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கின்றனர். பின்பு தடுப்பூசிக்கு தனியாக பணம் வசூலிக்கின்றனர்.
இதன் மூலம் குழந்தைகளின் உடல் நலமும் பாதிக்கப்படுவதாக பொது நல அமைப்புகள் மூலம் அரசுக்கு புகார்கள் வந்தன.
இந் நிலையில் நாகர்கோவில், பார்வதி புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு டிரஸ்ட் சார்பில் நேற்று தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாகவும், பிளஸ் டூ படித்தவர் தடுப்பூசி போட்டு பணம் வசூலித்ததாகவும் வடசேரி போலீசில் நுகர்வோர் அமைப்பை சேர்ந்த சுவாமிதாஸ் என்பவர் புகார் செய்தார்.
இதையடுத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ரால்ப் செல்வின் விசாரணை நடத்தினார். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் தடுப்பூசி முகாம் நடத்தி ஊசி போட்டதாக சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ஜெயராமன் என்பவரை வடசேரி போலீசார் நேற்று கைது செய்தனர். இதைப் பார்த்ததும் அங்கிருந்த 2 நர்சுகளும், முகாமை நடத்தியவரும் தப்பியோடிவிட்டார்.
போலி ஊசி போடும் இந்த கும்பல் ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் நெல்லை சந்திப்பு, மேலப்பாளையம், நாங்குநேரி பகுதிகளில் முகாம்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.