இலங்கையில் ராணுவத் தாக்குதலில் 11 மாணவர்கள் உள்பட 17 பேர் பலி
கொழும்பு: இலங்கையின் மடு பகுதியில், நேற்று இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பள்ளி மாணவ, மாணவியர் 17 பேர் உயிரிழந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான கடும் சண்டையில் இரு தரப்பிலும் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது. இடையில் சிக்கி பல அப்பாவிகளும் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மடு என்ற இடத்தில் நேற்று பள்ளிப் பேருந்தின் மீது இலங்கை ராணுவத்தின் ஆழ் ஊடுறுவுப் பிரிவினர் நடத்திய தாக்குதலில் 11 பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் இறந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மடு அருகே உள்ள தாட்சாணமருதமடு என்ற இடத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சின்ன பாண்டிவிரிச்சான் பள்ளிக்கூடத்தின் பேருந்து ஒன்று மது சர்ச் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. இப்பேருந்து பாலம்பிட்டி என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது இலங்கை ராணுவம் வைத்திருந்த கண்ணிவெடி வெடித்தது. இதில் பேருந்தில் இருந்த 11 குழந்தைகள், 2 ஆசிரியர்கள், பள்ளிக்கூட முதல்வர் உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக பள்ளமேடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் 7 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதை ராணுவம் மறுத்துள்ளது. அப்பகுதி புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. எனவே அங்கு என்ன நடந்தாலும் அதற்கு புலிகளே பொறுப்பு என ராணுவம் தெரிவித்துள்ளது.
முக்கிய புலிகள் தளம் பிடிபட்டது
இதற்கிடையே, மன்னார் மாவட்டத்தில் புலிகள் வசம் இருந்து வந்த வியட்டான்குளம் என்ற முக்கிய இடத்தை ராணுவம் பிடித்துள்ளது.
இப்பகுதியில் நடந்த கடும் சண்டையில் 22 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் 16 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.
வெளிஓயா பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.