இலங்கை கடற்படை கடத்திச் சென்ற 12 தமிழக மீனவர்களும் விடுவிப்பு
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் இலங்கை கடற்படையினரால் இந்த மீனவர்கள் கடத்திச் செல்லப்பட்டனர். இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். கடந்த 19ம் தேதியிருந்து 3,000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந் நிலையில் சட்டசபையில் இன்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில்,
ராமேஸ்வரம் கடல் பகுதியில் சமீபத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களும், 3 விசை படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க் கட்சியினரும், தோழமைக் கட்சியினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தமிழக அரசு அந்த மீனவர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை எடுத்தது. முதல்வர் கருணாநிதி கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மத்திய அரசிடம் பேசினார். நேற்று இரவும் இதுபற்றி பேசினார். உடனடியாக தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
இதையடுத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களும் 3 படகுகளும் இன்று விடுவிக்கப்பட்டனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஆற்காடு.
இந்த அறிவிப்பை அதிமுக தவிர்த்த பிற கட்சி உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி வரவேற்றனர்.
தமிழக மீனவர்கள் மீடி பிடிக்க வருவதைத் தடுக்க கச்சத்தீவு அருகே இலங்கை அரசு கடலில் கண்ணிவெடிகளை போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications