ராமர் பாலத்திற்குச் சுற்றுலா சென்ற 4 படகுகள் பறிமுதல்
ராமேஸ்வரம்: சர்ச்சைக்குரிய ராமர் பாலத்திற்கு சுற்றுலாப் பயணிகளைக் கூட்டிச் சென்ற நான்கு படகுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ராமர் பால விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பான விவாதப் பொருளாக இருந்து வரும் நிலையில், அதை சுற்றுலா தலமாக மாற்றியுள்ளனர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சில படகு உரிமையாளர்கள்.
ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ராமர் பாலத்தைக் காட்டுவதாக கூறி படகுகளில் அழைத்துச் சென்று எதையாவது ஒன்றைக் காட்டி இதுதான் ராமர் பாலம் என்று கூறி பணம் கறந்து வரும் செயல் அங்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனுஷ்கோடியில் இருந்து 8 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ராமர் பாலத்தைக் காட்டுவதாக கூறி மீனவர் ஒருவர் படகில் அழைத்துச் சென்றார்.
இதேபோன்று பாம்பன் பகுதியைச் சேர்ந்த 27 மாணவர்களை ஏற்றிக் கொண்டு இன்னொரு படகு மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
மேலும் 2 படகுகளில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராமர் பாலத்தை பார்ப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார், கடற் படையினரோடு விரைந்து சென்று அந்த 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி ராமர் பாலம் பகுதியில் நுழைந்ததாக அவர்கள் மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டது. அந்த படகுகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு, அந்த படகுகளுக்கு வழங்கப்பட்ட டீசல் கோட்டா உரிமமும் ரத்து செய்யப்பட்டது.