தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 10 அரசு பொறியியல் கல்லூரிகள்
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டுக்குள் மேலும் 10 அரசு பொறியியல் கல்லூரிகள் துவங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி அளித்த பதில்:-
தமிழ்நாட்டில் 288 ஆசிரியர் பயிற்சி கல்லூரி உள்ளன. இதில் பெரும்பாலான கல்லூரிகள் மத்திய கல்வித்துறையிடம் அனுமதி பெற்று அமைக்கப்பட்டவை. இதற்கு தமிழக அரசு எந்த அனுமதியும் கொடுப்பதில்லை.
பல ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் முறையான அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை உள்ளது. அது போன்ற சூழ்நிலை வரும்போது மாணவர்களை தூண்டி விட்டு போராட்டத்தில் ஈடுபடுத்துகிறார்கள்.
தற்போது 149 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மாநில அரசின் அனுமதி பெறாமலும், பல்கலைக்கழகங்களின் ஒப்புதல் பெறாமலும் நடத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் நலன் கருதி பதிவு செய்யப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் பட்டியலை பத்திரிகைகளில் வெளியிடுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 7 புதிய கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் போன்ற பட்டய படிப்புகளை ஷிப்டு முறையில் நடத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக மாணவ, மாணவிகளுக்கு கல்வி போதிக்க முடியும்.
பண்ருட்டி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய இடங்களில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கப்படும். என்ஜினீயரிங் கல்லூரி இல்லாத இடங்களில் இந்த ஆண்டுக்குள் 10 என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications