டயர் தொழிற்சாலை-எம்ஆர்எப் நிறுவனத்துக்கு தமிழக அரசு எச்சரிக்கை
திருவொற்றியூரில் இயங்கி வந்த எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை கடந்த ஆண்டு மூடப்பட்டது. இந்த தொழிற்சாலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதில் பணியாற்றிய ஊழியர்களின் வாழ்க்கையைக் காக்க வேண்டும் என சட்டசபையில் இன்று பல கட்சி உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அதிமுக, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன.
இக் கட்சிகளைச் சேர்ந்த ஜெயக்குமார், ஞானசேகரன், வேல்முருகன், மகேந்திரன், குணசேகரன் பேசியதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பரசன் பதிலளித்தார். அவர் கூறுகையில்,
திருவொற்றியூர் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் 790 நிரந்தர பணியாளர்களும், 320 பயிற்சி பணியாளர்களும், 59 சாதாரண ஊழியர்களும் பணியாற்றி வந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரவு பணி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் 28 ஊழியர்களை நிர்வாகம் வேலை நீக்கம் செய்தது.
இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசும் தலையிட்டு நிர்வாகத்திற்கு தக்க அறிவுரை வழங்கியது. ஆனால் அதை நிர்வாகம் ஏற்கவில்லை.
இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் தொழிற்சாலையை நிர்வாகம் கதவடைப்பு செய்தது. மேலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது.
அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ.5,500 வழங்க அரசு உத்தரவிடப்பட்டது. 790 பேருக்கு நிர்வாகம் பணம் தந்துவிட்டது. எனவே அரசு இதில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. கதவடைப்பு நடந்ததை கேள்விப்பட்டு 17 நாட்களில் தேவையான உத்தரவுகளை பிறப்பித்த அரசு தான் இந்த அரசு என்றார்.
இதையடுத்துப் பேசிய ஜெயக்குமார் (அதிமுக), ஆலையை உடனே திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதை நாட்டுடமை ஆக்கயாக்க வேண்டும் என்றார்.
அப்போது பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அரசின் உத்தரவை நிர்வாகம் மதிக்கவில்லை. நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்கள். தொழிற்சாலையை திறக்காமல் அவர்கள் பிடிவாதம் காட்டுவதால் மின் சப்ளையை நிறுத்த வேண்டும், தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று இங்கு பேசிய உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இந்த விவாதத்திற்கு பிறகும் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை திறக்கப்படாவிட்டால் 1 வார காலத்திற்குப் பிறகு நிர்வாகத்தை அழைத்துப் பேசி திறக்க ஏற்பாடு செய்வோம். அப்படியும் அவர்கள் திறக்க முன்வரா விட்டால் அந்த தொழிற்சாலையை நாட்டுடமையாக்க அரசு முயற்சி எடுக்கும் என எச்சரித்தார் ஆற்காடு வீராசாமி.