டாலர் மதிப்பு சரிவு: சம்பளத்தை குறைக்கும் டிசிஎஸ்-விப்ரோ
மும்பை: டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதால் சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபத்தில் பெரும் ஓட்டை விழுந்து வருகிறது. இதையடுத்து பல சாப்ட்வேர் நிறுவனங்களின் தங்களது ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்க ஆரம்பித்துள்ளன.
பல நிறுவனங்கள் ஊதிய உயர்வை மட்டுப்படுத்தியுள்ளன. சில நிறுவனங்கள் கொடுத்து வரும் ஊதியத்தையே குறைக்க ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்களின் புராஜெக்டுகள் அமெரிக்காவையே சார்ந்துள்ளதால் இந்த நிலை.
ரூபாயின் மதிப்பு அதிகரித்துவிட்டதால், டாலர் மதிப்பில் இந்த நிறுவனங்கள் ஈட்டும் பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. ரூபாயின் மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 12 சதவீதம் அதிகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் சாப்ட்வேர் நிறுவனங்களின் வருமானம் 12 முதல் 15 சதவீதம் வரை குறைந்துவிட்டது.
இதையடுத்து விப்ரோ, டிசிஎஸ் ஆகிய நாட்டின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் ஊதியத்தில் உள்ள வேரியபல் அலவன்ஸை (variable allowance) குறைத்துவிட்டன. இதன்மூலம் செலவை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என இந்த நிறுவனங்கள் கருதுகின்றன.
சிறிய நிறுவனங்களில் நிலைமை இன்னும் மோசம். அவை புதிதாக வேலைக்கு ஆட்களை சேர்ப்பதை நிறுத்த ஆரம்பித்துள்ளன.
அமெரிக்க பொருளாதாரத்தில் ேதக்கம் ஆரம்பித்துவிட்ட நிலையில் ரூபாயின் மதிப்பு இப்போதைக்கு குறையாது என்றே தெரிகிறது. இதனால் சாப்ட்வேர் நிறுவனங்கள் சந்திக்கும் இந்த சவால் இப்போதைக்கு சீராகாது.
டாலர் மதிப்பு குறைந்ததால் இந்தியாவில் ஜவுளி உள்ளிட்ட ஏற்றுமதியை சார்ந்துள்ள தொழில்கள் பெரும் அடியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications