ம்ஹும் முடியவே முடியாது.. விட்டுக் கொடுக்காத துரைமுருகன்! மாற்றி யோசித்த ஸ்டாலின்! திகுதிகு திமுக!
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை முழுமையாக மறுசீரமைக்கும் பணியில் திமுக தலைவர் முக ஸ்டாலின், தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகனைப் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உடல்நிலை காரணமாக அவர் பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சில தகவல் வெளியான நிலையில், "பதவியை விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்ற உறுதியான நிலைப்பாட்டில் துரைமுருகன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்த பிறகு திமுகவில் விரிவான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து கட்சித் தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கட்சி அமைப்பை மொத்தமாக மாற்ற ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் திமுக பொதுச்செயலராக நீண்ட காலமாக செயல்பட்டு வரும் துரைமுருகன் எதிர்காலம் குறித்தும் கட்சிக்குள் ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது.
டி.ஆர். பாலு
வயது மற்றும் உடல்நிலை காரணங்களால் அவருக்கு ஓய்வு அளித்து, அந்தப் பொறுப்பில் மூத்த தலைவர்களில் ஒருவரை நியமிக்கலாம் என்ற யோசனை தலைமை மட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் பெயரும் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்கள் துரைமுருகனின் கவனத்திற்குச் சென்றபோது, அவர் தனது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக தெரிவித்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
துரைமுருகன்
"எனது பதவிக்காலம் இன்னும் முடிவடையவில்லை. 2027 வரை பொதுச்செயலர் பதவியில் நீடிக்கும் உரிமை எனக்கு உள்ளது. உடல்நலக் குறைவு இருந்த காலத்திலும் மறைந்த பேராசிரியர் அன்பழகன் பொதுச்செயலராகத் தொடர்ந்தார். அவரிடம் யாரும் பதவி விலகச் சொல்லவில்லை. அதுபோல நானும் என் பொறுப்பை தொடர்ந்து மேற்கொள்வேன். இந்தப் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்று அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுச்செயலர்
கடந்த சில மாதங்களாக திமுகவில் துரைமுருகன் ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்விகளும் திமுக வட்டாரங்களில் எழுந்து வருகின்றன. குறிப்பாக சில முக்கிய அரசியல் முடிவுகளில் அவரிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை என்ற பேச்சுகள் பரவி வருகின்றன. அதற்கு உதாரணமாக, தேசிய அளவிலான கூட்டணி அரசியல் தொடர்பான சில முடிவுகள் மற்றும் தேர்தலுக்குப் பிறகான முக்கிய ஆலோசனைகளில் அவரது பங்கேற்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
அதிகாரம் குறைக்கப்படுகிறதா?
மேலும், சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை அறிவிக்கும் வழக்கமான நடைமுறையிலும் மாற்றம் ஏற்பட்டதாகவும் பேசப்படுகிறது. பொதுவாக எம்.எல்.ஏ.க்கள் கூட்ட அறிவிப்புகள் பொதுச்செயலரின் பெயரில் வெளியாகும். ஆனால் சமீபத்திய அறிவிப்புகள் கட்சியின் கொறடா பெயரில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவும் துரைமுருகனின் அதிகாரம் குறைக்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இணை பொதுச்செயலர்
இந்த நிலையில், பொதுச்செயலர் பதவியில் மாற்றம் செய்ய முடியாத சூழல் உருவானால், புதிய நிர்வாக அமைப்பை உருவாக்கும் திட்டம் திமுக தலைமையிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கட்சியில் இதுவரை இல்லாத "இணை பொதுச்செயலர்" என்ற புதிய பொறுப்பை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பதவியின் மூலம் கட்சியின் தினசரி நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் அமைப்பு சார்ந்த பணிகளை மற்றொரு மூத்த தலைவரிடம் ஒப்படைத்து, அதே நேரத்தில் துரைமுருகன் பொதுச்செயலராக தொடரும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாம்.
முக ஸ்டாலின்
திமுகவில் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும்வலுப்பெற்று வருகிறது. அதே நேரத்தில் மூத்த தலைவர்களின் அனுபவமும் கட்சிக்கு அவசியம் என்ற கருத்தும் நிலவுகிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மீண்டும் எழுச்சி பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கும் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது திமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications