அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் வெட்டிக் கொலை
சிதம்பரம்: சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் நேற்று காலை அடையாளம் தெரியாத கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், பம்பரப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமையா மகன் சிவசாமி (38). இவர் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அலுவலக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
சிவசாமி நேற்று காலை அலுவலகத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது 9-40 மணியளவில் பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டிற்கு அருகில் ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதையடுத்து சிவசாமி பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவசாமியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள். சிவசாமியை கொலை செய்த கும்பல் யார், முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.