காங். செயலாளர் வெட்டிக் கொலை-கள்ளச் சாராய கும்பல் கைவரிசை
சென்னை: சென்னை அருகே கள்ளச் சாராயம் காய்ச்சிய கும்பலை போலீசாரிடம் காட்டிக் கொடுத்த வார்டு காங்கிரஸ் செயலாளரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
மறைமலைநகர் சின்னசெங்குன்றம் காலனியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவர் அப்பகுதியின் 11வது வார்டு காங்கிரஸ் செயலாளராக உள்ளார். இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த வீரபத்திரனை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தியதில், கள்ளச் சாராய கும்பலை காட்டி கொடுத்ததால் தான் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இப் பகுதியில் ரவி என்பவர் கள்ளச் சாராயம் விற்று வருகிறார். சமீபத்தில் ரவி கள்ளச் சாராய கேன்களை சகாதேவன் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்தார். இது குறித்து வீரபத்திரன் போலீசுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, மதுவிலக்கு போலீசார் விரைந்து வந்துப 56 கேன்களில் பதுக்கி வைத்திருந்த சாராயத்தை கைப்பற்றி, சகாதேவனையும் கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரவி தனது கூட்டாளிகளுடன் வந்து வீரபத்திரனை வெட்டி படுகொலை செய்தது போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
காங்கிரஸ் செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மறைமலைநகர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரவி உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications