துபாய்-கைதாகி மீண்ட 100 இந்தியர்கள் சென்னை வருகை
சென்னை: துபாயில் விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 100 இந்திய தொழிலாளர்கள் தண்டனைக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.
துபாயிலும், அதன் சுற்றுப்பகுதிகளிலும் வேலை பார்த்து வந்த ஆந்திரா, கேரளா, பீகார் மற்றும் டெல்லியைச் சேர்ந்த 100 பேரின் விசா காலம் முடிந்தது. அதன் பிறகும் அவர்கள் அங்கே ரகசியமாக தங்கியிருந்து வேலை பார்த்த போது போலீசாரிடம் பிடிபட்டனர்.
துபாய் நீதிமன்றம் அவர்களுக்கு 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதித்தது. சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் தண்டனை காலம் முடிந்ததைத் தொடர்ந்து சவூதி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த விமானம் நேற்று காலை 9 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. சென்னை வந்து சேர்ந்த திருவனந்தபுரம் டிகோலஸ் (வயது 32) என்பவர் கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்க்க துபாய்க்கு சென்றேன்.
எனக்கு அளிக்கப்பட்ட 3 ஆண்டு கால விசா முடிந்த பிறகும் அங்கே தங்கியிருந்ததால் கைது செய்யப்பட்டேன். தண்டனைக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து என்னை இந்தியா அனுப்பினர்.
மீண்டும் திருவனந்தபுரம் செல்ல நான் விரும்பவில்லை. டெல்லி செல்லத் திட்டமிட்டுள்ளேன். அங்கு வேறு வேலையில் சேரத் திட்டமிட்டுள்ளேன். அதன் பிறகே சொந்தங்களைப் பார்க்கப் போகிறேன் என்றார்.
சென்னை வந்து சேர்ந்த இந்த ஊழியர்களில் பலர் தங்களிடமிருந்து கைக்கடிகாரம், செல்போன்கள் போன்றவற்றை அங்கிருந்தவர்களிடம் கிடைத்த விலைக்கு விற்றனர். கையில் வேறு பணம் இல்லாததால், இவற்றை விற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
சொர்க்கமே என்றாலும் நம் ஊர் போலாகுமா என்ற பாடல் வரிகளுக்கு எத்தனை ஆழ்ந்த அர்த்தம் உள்ளது என்பது இந்த தொழிலாளர்களின் நிலையைப் பார்த்தபோது நன்றாகப் புரிந்தது.