ஜப்தி-வீதிக்கு வந்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள்!
தேனி: தேனியில் இழப்பீடு வழங்காத கலெக்டர் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டது.
போடி அருகே 11.55 ஏக்கர் நிலம் ஆதி திராவிடர்களுக்கு வீடு கட்ட 1982ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு செய்வது குறித்த வழக்கில் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.
நீதிமன்ற உத்திரவுப்படி மாவட்ட நிர்வாகம் நில உரிமையாளர்களுக்கு ரூ. 77 லட்சம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தது.
இதனால் நில உரிமையாளர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர். பெரியகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இழப்பீடு வழங்காத தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அசையும், மற்றும் அசையாத சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
போலீசார் முன்னிலையில் கோர்ட் அமீனாக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறையில் உள்ள அசையும், மற்றும் அசையாத சொத்துக்களையும், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அலுவலகத்தில் உள்ள சொத்துக்களில் உள்ள 26 பொருட்களையும் ஜப்தி செய்தனர்.
இதனால் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டது. பின்பு அதிகாரிகள் குழு இழப்பீடு வழங்க உறுதி மொழி கொடுத்தை அடுத்து கோர்ட் அமீனாக்கள் ஜப்தி செய்த பொருட்களை அங்கேயே விட்டு விட்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் தேனி கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.