For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவ உதவி வேண்டி செளதியில் பரிதவிக்கும் தமிழர்

By Staff
Google Oneindia Tamil News


ரியாத்: செளதி அரேபியாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர், திருடர்களால் தாக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு சிகிச்சை செய்ய பணம் தேவைப்படுகிறது. தமிழரான அவருக்கு மலையாள அமைப்பு உதவி செய்ய முன்வந்துள்ளது. அதேபோல தமிழர்களும் முன்வந்து உதவி செய்தால் அவர் உடல் நலம் பெற்று ஊர் திரும்ப முடியும்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மது கனி. வயது 52. இவர் செளதி அரேபியாவின் அல்கர்ஜ் என்ற இடத்தில் கூடாரத்தில் தங்கி ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு கொள்ளைக் கூட்டம், கனியைக் கடுமையாக தாக்கி காயப்படுத்தியது. பின்னர் 1000 ரியால் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்த பர்ஸைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டது.

படுகாயமடைந்து கிடந்த கனியை, சிலர் காரில் ஏற்றி ரியாத் தெருவில் போட்டுவிட்டுச் சென்றனர். அவரது நிலைமையைப் பார்த்த தமிழ்நாடு தவ்ஹீத் அமைப்பைச் சேர்ந்த சிலர் கனியை மீட்டு சுமேசி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் கனியைப் பற்றி முழு விவரம் தேவை என்று கூறி மருத்துவமனை ஊழியர்கள், மீண்டும் கனியை பிளாட்பாரத்தில் போட்டு விட்டனர்.

இதுகுறித்த செய்தி செளதியில் இருந்து வெளியாகும் மலையாளப் பத்திரிக்கையில் வெளிவந்தது. இதையடுத்து மலையாள அமைப்பைச் சேர்ந்த சிலர் கனிக்கு உதவ முன்வந்தனர். முதலில் கனியின் ஸ்பான்சரிடம் தொடர்பு கொண்டு உதவி கோரினர். ஆனால், கனி ஒரு கிராமத்துக்காரர், வசதியில்லாதவர் அவருக்கெல்லாம் உதவி செய்ய முடியாது என்று ஸ்பான்சர் இரக்கமின்றி கூறி விட்டார்.

இதையடுத்து இந்திய தூதரகத்தின் உதவி நாடப்பட்டது. இந்தியத் தூதரகம் கனிக்கு மருத்துவ சிகிச்சை செய்யத் தேவையான சான்றிதழை கொடுத்துள்ளது. ஆனால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை செய்ய ரூ. 20,000 முன் பணமாக செலுத்த வேண்டும் என்கிறார்களாம்.

கொள்ளையர்கள் கடுமையாக தாக்கியதால் கனியின் கழுத்து எலும்பும், நடு எலும்பும் முறிந்துள்ளது. உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அவரது கை, கால்கள் செயல்படாது என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

குறைந்தபட்சம் முதலுதவியை செய்து ஊருக்கு அனுப்பி வைக்கலாம் என்றாலும் கூட ரூ. 10,000 ஆயிரம் ரூபாய் தேவை.

மலையாள அமைப்பு கனிக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது. அதேபோல தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உதவினால் அவருக்கு முழு அளவில் சிகிச்சை செய்து ஊருக்கு அனுப்பி வைக்க முடியும்.

இதுதொடர்பான நிதி திரட்டும் முயற்சியில் தஃபர்ரஜ் அமைப்பு ஈடுபட்டுள்ளது. மேலும், ரியாத் தமிழ்ச் சங்கத்தையும் அவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

அந்நிய மண்ணில் படுகாயமுற்று மோசமான நிலையில் இருக்கும் முஹம்மது கனிக்கு உதவிக் கரம் நீட்ட விரும்புவோர் ரியாத் தமிழ்ச் சங்கத்தை தொடர்பு கொள்ளலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X