சென்னை டூ திருச்சி.. வெறும் 3 மணி நேரம்தான்! கண் காட்டிய விஜய்.. களத்தில் இறங்கிய NHAI!
சென்னை: தற்போது சென்னையிலிருந்து திருச்சி போக குறைந்தது 5-6 மணி நேரம் ஆகிறது. இந்த பயண நேரத்தை குறைக்கும் வகையில், புதிய பசுமை வழி விரைவு சாலையை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து இந்த பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தீவிரப்படுத்தியிருக்கிறது. திட்டம் அமலுக்கு வந்தால், பயண நேரம் 3 மணி நேரமாக குறையும்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கார்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்திருக்கிறது. இது போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாகும். இப்படி இருக்கையில், நெரிசலை தவிர்க்கவும் விரைவான போக்குவரத்து வசதியை உறுதி செய்யவும் புதிய சாலை தேவையானதாக இருக்கிறது. எனவேதான் புதிய சாலைக்கான பணிகளை வேகப்படுத்த தமிழக அரசு கேட்டிருக்கிறது.

திட்டம் இதுதான்
சென்னை வெளிவட்ட சாலையின் சிங்கப்பெருமாள் கோவில் சந்திப்பில் தொடங்கி, 12 மாவட்டங்கள் வழியாக நேர்க்கோட்டில் இந்த புதிய சாலை அமைக்கப்பட இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் என கடைசியாக திருச்சியில் இந்த சாலை முடிவடைகிறது. இந்த ரோடு நேர்க்கோட்டில் போடப்பட்டாலும், இடைப்பட்ட மாவட்டங்களை இணைப்பு சாலைகள் மூலம் இணைக்கும்படி இந்த ரோடு அமைய இருக்கிறது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.20,000 ஆகும்.
முதல்வர் எடுத்த முயற்சி
இந்த திட்டம் ஏற்கெனவே அமல்படுத்தப்பட இருந்த நிலையில், சில சிக்கல்களால் கால தாமதம் ஏற்பட்டது. ஆனால், முதலமைச்சர் விஜய் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து தற்போது திட்டத்திற்கான பணிகளை NHAI தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த சாலையின் மொத்த நீளம் 300 கி.மீ. சாலைக்காக 90 மீ அகல வழித்தடம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இது 6 வழிச்சாலையாக இருக்கும் என்பதால், வாகனங்கள் சுமார் 120 கி.மீ வேகம் வரை செல்ல அனுமதிக்கப்படும்.
ஏன் இந்த சாலை முக்கியம்?
சாதாரண வார விடுமுறை நாட்களிலேயே.. சென்னையிலிருந்து வெளியேறும் அதிக வாகனங்கள் காரணமாக பரனூர்-செங்கல்பட்டு வரையிலான 4 வழிச்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் இந்த சிறிய தூரத்தை கடக்கவே 2 மணி நேரம் வரை ஆகின்றன. இந்த நெரிசலை சமாளிக்க உடனடியாக புதிய சாலை தேவையானதாக இருக்கிறது. எனவேதான் இந்த சாலை பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டிருக்கிறது.
சிக்கல்கள் என்ன?
இது பசுமைவழிச்சாலை என்பதால், சாலையின் சில பகுதிகள் காடுகள் மற்றும் குன்றுகள் நிறைந்த பகுதியின் வழியாக செல்கின்றன. இதற்காக சூழலியல் அனுமதியை பெறுவது சிக்கலானதாக இருக்கிறது. இருப்பினும் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சட்ட அனுமதிகள் இந்த ஆண்டே முடிக்கப்பட்டு பணிகள் சீக்கிரமாக தொடங்கப்படும் என்று NHAI தெரிவித்திருக்கிறது.
இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால், சென்னை-பெங்களூர் விரைவு சாலையை தொடர்ந்து தமிழகத்தில் அமைய இருக்கும் இரண்டாவது தேசிய விரைவுச்சாலையாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications