ரூ. 1 கோடி நிலத்தை சுருட்டிய தேமுதிக கவுன்சிலர்
சென்னை: சென்னையில் சுங்க இலாகா அதிகாரிக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த தேமுதிக கவுன்சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த செல்லத்துரை சுங்க இலாகாவில் இணை ஆய்வாளராக உள்ளார். இவர் சென்னை நகர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், நான் சென்னை சுங்க இலாகா துறையில் பணி புரிகிறேன். நானும் எனது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து ஜமீன் பல்லாவரம் பகுதியில் 50 சென்ட் நிலத்தை தேவசகாயம் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கினோம். தேவசகாயம் அந்த நிலத்தை ஜாபர் அலி என்பவரிடமிருந்து வாங்கியிருக்கிறார்.
இந்த நிலத்தின் இப்போதைய மதிப்பு ரூ. 1 கோடி ஆகும்.
ஆனால், ஜாபர் அலியும் தாம்பரம் நகராட்சியில் கவுன்சிலராக உள்ள தே.மு.தி.கவைச் சேர்ந்த ரங்கநாதனும் சேர்ந்து இந்த நிலத்துக்கு போலி பத்திரங்கள் தயாரித்து மீண்டும் ஒருவருக்கு ரூ. 8 லட்சத்துக்கு விற்றுள்ளனர். அட்வான்சாக ரூ.2 லட்சம் வாங்கியுள்ளனர்.
ஜாபர் அலி மற்றும் ரங்கநாதன் ஆகியோர் செய்த இந்த மோசடிக்கு அன்புசெழியன், சந்திரசேகர், ராஜா, ரோகிணி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்தும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷ்னர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். அதில் தேமுதிக கவுன்சிலர் ரங்கநாதன் தான் இந்த மோசடிக்கு முழு பின்னணியில் இருந்தவர் என்பதும், போலி ஆவணங்களைத் தயாரித்ததும் அவரே என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ரங்கநாதனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரங்கநாதன் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடியில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
இதன்மூலம் சுவாஹா, ஊழலில் பிற திராவிடக் கட்சிகளுக்கு தேமுதிகவினரும் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.
ரங்கநாதன் தேமுதிகவில் இருந்து நீக்கம்:
இதற்கிடையே நில மோசடியில் ஈடுபட்ட ரங்கநாதனை கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவருடன் கட்சி நிர்வாகிகள் எவரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் என தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன் கூறியுள்ளார்.