தமிழகத்தில் விலைவாசி குறைவாகவே உள்ளது: கருணாநிதி
சென்னை: பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் விலைவாசி குறைவாகவே இருப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது என்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். ஆனால் கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் விலைவாசி குறைவாகவே உள்ளது.
உற்பத்திக் குறைவு காரணமாக துவரம் பருப்பு, கொண்டக் கடலை, பாமாயில் ஆகியவை சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வருடமாகவே விலை உயர்ந்து காணப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இவற்றின் விலை உயரவில்லை.
இருப்பினும் பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் நியாய விலைக்கடைகள் மூலம் தமிழக அரசு விற்பனை செய்ய தொடங்கிய பிறகு, வெளிச் சந்தையிலும் அவற்றின் விலை குறைந்துள்ளது.
வெளி மார்க்கெட்டில் துவரம் பருப்பு கிலோ ரூ. 40க்கு விற்கப்படுகிறது. அது நியாய விலைக் கடைகளில் ரூ. 34க்கு விற்கப்படுகிறது. கொண்டக் கடலை வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ. 48க்கும், பாமாயில் லிட்டர் ரூ. 46க்கும் விற்கப்படுகின்றன. நியாய விலைக் கடைகளில் இவற்றின் விலை தலா ரூ. 40க்கு விற்கப்படுகிறது.
பாமாயில் உற்பத்தி மலேசியாவில் குறைந்து விட்டது. சர்வதேச சந்தையிலும் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவேதான் பாமாயில் விலையை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை.
அனைத்திந்திய அளவில் மத்திய அரசு தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் இந்த நடைமுறையை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தால், அது நல்ல பலனை விளைவிக்கும்.
மற்ற மாநிலங்களில் விலை குறையும் போது, தமிழகத்தில் மேலும் விலைவாசி குறைய அது வழிவகை செய்யும். இந்த கருத்தை மத்திய அரசு வேண்டுகோளாக எண்ணி செயல்படுத்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications