ஆயிஷாவுடன் கல்யாணம் நடக்கவில்லை - மறுக்கிறார் சோயிப் மாலிக்
கராச்சி: இந்தியாவைச் சேர்ந்த எந்தப் பெண்ணுடனும் தனக்கு தொலைபேசி மூலம் கல்யாணம் நடக்கவில்லை. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷாவின் தந்தை சித்திக் ஆள் மாறாட்டம் செய்து மோசடி செய்யப் பார்த்தார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சோயிப் மாலிக்கின் சகோதரர் இம்ரான் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சித்திக் என்பவரின் மகள் ஆயிஷா. இவரும், சோயிப் மாலிக்கும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. பின்னர் திடீரென இந்த காதல் முறிந்து விட்டதாக மாலிக் கூறியதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் சமீபத்தில் சித்திக் இந்தத் தகவலை மறுத்தார். தனது மகளுக்கும், மாலிக்குக்கும் தொலைபேசியில் திருமணம் நடந்து விட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், விவாகரத்து கோரியிருப்பதாகவும் அவர் கூறினார். ஆயிஷாவும், மாலிக் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும், அவருடன் சேர்ந்து வாழப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மாலிக்கும், அவரது சகோதரர் இம்ரானும் லாகூரில் செய்தியாளர்களைச் சந்தித்து திருமணச் செய்தியை மறுத்தனர். இதுகுறித்து இம்ரான் கூறுகையில், சித்திக் மோசடி செய்து விட்டார். இன்டர்நெட்டில் ஆயிஷா என்ற பெண்ணை சந்தித்த சோயிப் அவரை காதலித்தார். அவரைத் திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார்.
இதையடுத்து சித்திக், தனது மகள்தான் ஆயிஷா என்றார். இந்த நிலையில் ஆயிஷாவின் புகைப்படங்களை மாலிக்கிடம் சித்திக் குடும்பத்தினர் காட்டினர். அதைப் பார்த்த அவர் அதிர்ந்தார். காரணம், அவர் இன்டர்நெட்டில் பார்த்த பெண் வேறு, சித்திக் காட்டிய பெண் வேறு. ஆள் மாறாட்டம் செய்து எங்களை அவர்கள் ஏமாற்றப் பார்த்தனர்.
சித்திக் குடும்பத்தினர் மீது வழக்கு தொடர சோயிப் திட்டமிட்டுள்ளார். இதற்காக விசா கோரி விண்ணப்பித்துள்ளார். விசா கிடைத்தவுடன் இந்தியா சென்று வழக்கு தொடருவார்.
இந்தப் பிரச்சினையை வெளிப்படுத்த முதலில் நாங்கள் விரும்பவில்லை. ஆனால் சோயிப் அக்தர் பிரபல கிரிக்கெட் வீரர் என்பதால் பிரச்சினையாக்கி ஆதாயம் காண முயலுகிறார்கள் என்றார் இம்ரான்.
சித்திக் மறுப்பு:
மாலிக் தரப்பு புகார்களை, ஆயிஷாவின் தந்தை சித்திக் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாலிக் ஒரு பொய்யர். அவருக்கும், எனது மகளுக்கும் 2002ம் ஆண்டு ஜூன் மாதம் கல்யாணம் நடந்தது. அதன் பிறகு பலமுறை எனது வீட்டுக்கு அவர் வந்துள்ளார், எனது மகளைப் பார்த்துள்ளார்.
இப்போது ஆள் மாறாட்டம் செய்து விட்டதாக அவர் கூறுவது கடும் கண்டனத்துக்குரியது. அவர் இந்தியா வரட்டும், அவரை எனது வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார் கோபமாக.












Click it and Unblock the Notifications