நிதி மோசடி - முன்னாள் ஊராட்சித் தலைவிக்கு சிறை
தேனி:தேனி அருகே நிதி மோசடி வழக்கில் ஆறு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம், போடி தாலுக்கா காமராஜபுரம் ஊராட்சியில் கடந்த 2002 ம் ஆண்டு தலைவராக இருந்தவர் நாகம்மாள். இவர் ஊராட்சி நிதி ரூ 3 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் மீது வீரபாண்டி போலீசில் மாவட்ட நிர்வாகம் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் நாகம்மாள் கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். சம்பவத்தன்று நாகம்மாள் அவரது வீட்டில் தனியாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சீமைச்சாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
பின்பு அவரை போலீசார் பெரியகுளம் நீதி மன்றத்தில் ஆஜர் செய்தனர். அவரை காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். இதனையடுத்து நாகம்மாள் நிலக்கோட்டை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.