'காதலர் தினம்' ஹீரோ நடிகர் குணால் தற்கொலை

மும்பையைச் சேர்ந்தவர் நடிகர் குணால் என்ற குணால் சிங். காதலர் தினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சிம்ரனின் தங்கை மோனலுடன் (இவரும் தற்கொலை செய்து கொண்டார் என்பது நினைவுகூறத்தக்கது) பார்வை ஒன்றே போதுமே, பேசாத கண்ணும் பேசுமே, நண்பனின் காதலி, வருஷமெல்லாம் வசந்தம், புன்னகை தேசம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் குணால். கடைசியாக அவர் நடித்த படம் நண்பனின் காதலி.
மும்பையில் ஓஷிவாரா பகுதியில் நடிகை லாவண்யாவுடன் வசித்து வந்தார். அவரையே திருமணமும் செய்யவும் நிச்சயிக்கப்பட்டிருந்தது. லாவண்யா இப்போது தான் இந்தியில் நடிக்க ஆரம்பித்துள்ள புதுமுக நடிகையாவார்.
இந் நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் குணால் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டதால் அவர் தற்கொலை செய்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
காதலர் தினம் படத்திற்குப் பின்னர் அவர் நடித்த எந்தப் படமும் ஹிட் ஆகவில்லை. இதனால் பெரிய ஹீரோவாக முடியாமல் போனதால் பெரும் வருத்தத்தில் இருந்தார் குணால். கடந்த சில மாதங்களாகவே அவர் கடும் டிப்ரஷனில் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குணால் மரணத்திற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், இயக்குநர் கதிர், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications