புகார் கொடுக்க 20 கிமீ செல்லும் கிராம மக்கள்!
ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி அருகே உள்ள சில கிராம மக்கள் தங்களது புகாரை தெரிவிக்க சுமார் 20 கிமீ நடந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே புள்ளிமான் கோட்டை, தர்மத்திப்பட்டி, மல்லையாம்பட்டி, மூணாண்டிபட்டி, தேவர்காலனி, நடுக்கோட்டை, குண்டலப்பட்டி, புதூர், ராசப்பன் கோட்டை போன்ற பல குக்கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில் தேவையான அளவுக்கு போக்குவரத்து வசதி இல்லை. சாலை விபத்துக்களும் அடிக்கடி நடக்கிறது. திருட்டுச் சம்பவங்களுக்கும் குறைவில்லை. அடிக்கடி கலவரமும் நடப்பது வழக்கமாம்.
மலைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள் என்பதால் அவ்வப்போது வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து பீதியைக் கிளப்பும்.
இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இந்த கிராம மக்களுக்கு பெரும் சோகமாக இருப்பது ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் புகார் கொடுக்க 20 கிலோமீட்டர் தூரம் போனால்தான் காவல் நிலையத்தை அடைய முடியும் என்பதுதான்.
போலீஸில் புகார் கொடுத்தாலும் கூட, தூரமான பகுதிகள் என்பதால் அவர்கள் வருவதும் காலதாமதமாகிறது. சில நேரங்களில் போலீஸார் வரவே மாட்டார்களாம்.
இதனதால் கிட்டத்தட்ட கவனிப்பாரின்றி கிடக்கிறது இந்த கிராமங்கள்.
இதனால் தர்மத்துப்பட்டியை மையமாக வைத்து புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
நிறைவேற்றுமா அரசு?












Click it and Unblock the Notifications