திமுகவின் தப்புத் தாளம்-ஜெயலலிதா
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆதி திராவிட மாணவ, மாணவியர்கள் 12ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே உயர்கல்வி படிப்பதற்கான உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் ஆதி திராவிட மாணவ, மாணவியரின் உயர்கல்விக்குத் தடை ஏற்படுவது நிச்சயம். எனவே இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நான் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆதி திராவிட மாணவ சமுதாயத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய திமுக அரசு, வழக்கம் போல் மத்திய அரசின் பாட்டுக்குத் தப்பு தாளம் போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த உத்தரவு செயல்படுத்தபடுமேயானால் சுதந்திர இந்தியாவில் ஆதி திராவிட மக்களின் அடிமைச் சாசனம் புதுப்பிக்கப்படும் என்பதை மத்திய அரசும், மாநில அரசும் உணர வேண்டும்.
ஆதி திராவிட மாணவ, மாணவியரின் உரிமையை மீட்டுக் கொடுக்காமல் முதல்வர் கடிதம் எழுதிக் காலத்தை போக்கிக் கொண்டிருப்பது மத்திய அரசின் தவறான உத்தரவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதாகவே அமையும்.
எனவே ஆதி திராவிட மாணவர்கள் 12ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்னும் உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.