தமிழகத்தில் 5 மெகா தொழிற்சாலைகள்-நிஸான், மோசர் பேயர் நுழைகின்றன
இந்தத் தொழிற்சாலைகள் மூலம் 58,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழக அமைச்சரவை கூட்டம் கருணாநிதி தலைமையில் நேற்று மாலை நடந்தது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் 5 மிகப் பெரிய தொழிற்சாலைத் திட்டங்கள் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த திட்டங்களின் விவரம் வருமாறு:
ரெனால்ட்-நிஸான் கார் தொழிற்சாலை:
சென்னைக்கு அருகே ஒரகடத்தில் ஆண்டொன்றுக்கு 4 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் வகையில் மிகப் பெரிய தொழிற்சாலையை ரெனால்ட்-நிசான் ஆகிய கார் நிறுவனங்கள் கூட்டாக அமைக்கவுள்ளன.
அசோக் லேலண்ட் தொழிற்சாலை:
எண்ணூர் மற்றும் திருப்பெரும்புதூரில் பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் ஆண்டுக்கு 1 லட்சம் நடு ரக மற்றும் கன ரக வணிக வாகனங்களைத் தயாரிக்க அசோக் லேலண்ட் புதிய தொழிற்சாலை அமைக்கிறது. இது இந்த நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டமாகும்.
அசோக் லேலண்ட்-நிஸாண் கூட்டு தொழிற்சாலை:
மேலும் வல்லம் கிராமத்தில் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் லகு ரக வணிக வாகனங்களைத் தயாரிக்க அசோக் லேலண்ட் மற்றும் நிஸான் நிறுவனம் ஆகியவை இணைந்து இன்னொரு தொழிற்சாலையை நிறுவவுள்ளன.
மோசர் பேயர் சிலிகான் ஆலை:
ஒரகடத்தில் சிப்காட் உயர் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பிளாஷ் கார்டுகள், மீடியா பிளேயர்ஸ், சிலிகான் அடிப்படையிலான போட்டோ வோல்டிக் செல்கள், மெமரி கார்டுகள், பிலிம்கள் போன்றவைகளைத் தயாரிக்க மோசர் பேயர் நிறுவனம் தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளது.
சிக்னெட் சோலார்:
திருப்பெரும்புதூரில் சிப்காட் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சோலார் போட்டோ வோல்டிக் செல்கள், பிலிம்கள் தயாரிக்க அமெரிக்காவின் சிக்னெட் சோலார் நிறுவனம் ஆலை அமைக்கிறது.
இந்த 5 திட்டங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம் தமிழகத்தில் ரூ. 16,000 கோடி முதலீடு செய்யப்படும். இவ்வளவு மதிப்பிலான திட்டங்களுக்கு ஒரே நாளில் அனுமதி தரப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்த ெதாழிற்சாலைகளால் 58,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 47,500 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாகும்.
சிறப்பு பொருளாதார மண்டலம்:
அதே போல சென்னை தரமணியில் 25.27 ஏக்கர் பரப்பளவில், 4 மில்லியன் சதுர அடி கட்டிடப் பரப்பு கொண்ட சாப்ட்வேர் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், டாடா ரியாலிட்டி மற்றும் இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த சாப்ட்வேர் மண்டலத்தை உருவாக்கவுள்ளன. இதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தன் வசம் உள்ள 25.27 ஏக்கர் நிலத்தை ரூ. 1,326.42 கோடிக்கு குத்தகைக்கு வழங்கும்.