கட்டபொம்மன் நிலத்தை பறித்த அதிமுக எம்.எல்.ஏ- கருணாநிதி புகார்
சென்னை: வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு அரசு தானமாக கொடுத்த நிலங்களை, அதிமுக எம்.எல்.ஏ மோகன் அடிமாட்டு விலைக்கு வாங்கி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதைத் தட்டிக் கேட்க முடியாத ஜெயலலிதா, அரசிடம் குற்றம் காண வந்து விட்டார் என முதல்வர் கருணாநிதி காட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 1974ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோது, கட்டபொம்மனின் வாரிசுகள் 202 பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தேன். மேலும், ஒவ்வொருவருக்கும் தலா 3 ஏக்கர் நிலமும் இலவசமாக தர உத்தரவிட்டேன். அதன்படி நிலமும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.மோகன், தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தில், 0.50.0 ஹெக்டேர் நிலத்தை, அடிமாட்டு விலைக்கு வாங்கி, அங்கு 50 சென்ட் நிலப்பரப்பில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.
இது மாபெரும் குற்றச் செயல். கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு நிலத்தை கொடுத்தபோதே, யாருக்கும் விற்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. எனவே இந்த விற்பனை செல்லாது. மீண்டும் இந்த நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க வேண்டும்.
ஏழைகளுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை இப்படி அதிமுகவினர் பறிக்கும் செயல் தடுக்கப்பட வேண்டும். இப்படி சொந்தக் கட்சியினர் செய்து வரும் தவறுகளை தட்டிக் கேட்க முடியாத ஜெயலலிதா, திருத்த முடியாத ஜெயலலிதா, திமுக அரசு மீது பழி சுமத்தி குற்றம் சாட்டி வருகிறார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான படிப்பு உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) குறித்த விவகாரத்தில் திமுக அரசு மெத்தனமாக இருப்பதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் வெடித்தவுடனேயே, இதுகுறித்து நான் சட்டசபையில் விளக்கமாக தெரிவித்தேன். மாணவர்களின் நலன் பாதிக்கப்படாத வகையில் அரசு பார்த்துக் கொள்ளும் என்று தெரிவித்தேன்.
மேலும், இந்த உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கும் மாநில அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஒரு வேளை தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், தற்போது உள்ளதுபடியே ஸ்காலர்ஷிப் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் நான் சட்டசபையிலேயே உறுதி அளித்தேன்.
உண்மையிலேயே இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்திருக்குமானால், சட்டசபைக்கு திடீரென வந்து மோதல் சூழ்நிலையை உருவாக்கி வெளிநடப்பு செய்ததற்குப் பதிலாக, இந்தப் பிரச்சினையை சட்டசபையில் எழுப்பியிருக்கலாம்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனில் ஜெயலலிதாவுக்கு உண்மையான அக்கறை ஒருபோதும் இருந்ததில்லை. எப்போதெல்லாம் நான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறேனோ, அப்போதெல்லாம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோருக்காக பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க தவறியதே இல்லை.
ஆனால் ஜெயலலிதா 2001ல் ஆட்சிக்கு வந்தபோது, இந்த நிதி ஒதுக்கீட்டை, திமுக ஆட்சிக்காலத்தில் ரூ. 156 கோடியாக இருந்ததை ரூ. 125 கோடியாக 2002ம் ஆண்டு குறைத்தார்.
கடந்த ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது இந்த ஒதுக்கீடு ரூ. 320 கோடியாக அதிகரிக்கப்பட்டது என்று கூறியுள்ளார் கருணாநிதி.