சுயதொழில்-அரசின் கடனுதவி பெறுவது எப்படி?
மதுரை: படித்து வேலை இல்லாத இளைஞர்கள் சுயதொழில் செய்ய வங்கியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறும் முறை பற்றி விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
தமிழக அரசு, படித்து வேலை இல்லாத இளைஞர்கள் சுயமாக தொழில் செய்ய தேவையான கடன் உதவிகளை வழங்கி வருகிறது. மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கிகளுடன் இணைந்து இத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு.
பாரதப் பிரதமர் ரோஜ்கார் யோஜனா (PMRY-பிரதமர் வேலை வாய்ப்புத் திட்டம்) திட்டத்தி்ன் கீழ் இந்த கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த கடன் பெற விரும்புவோர் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் மற்றும் பெண்கள்கு 45 வயது வரை கடன் பெறலாம்.
இந்த கடன் பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்வு பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் குறைந்தது 6 மாதத்திற்கான தொழில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தகுதி உள்ளவர்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்த கடன் பெற பெற்றோர் மாத வருமானம் அல்லது பிள்ளைகள் மாத வருமானம் அல்லது கணவன்-மனைவி மாத வருமானம் ரூ. 40,000க்குள் இருக்க வேண்டும் என்பது அரசு விதியாகும் .
பொருளாதார, வணிக வாய்ப்புள்ள அனைத்து தொழில்களுக்கும், வேளாண்மை மற்றும் அதன் சார்புள்ள தொழில்களுக்கும் இந்த கடன் வழங்கப்படும். ஆனால் நேரடி விவசாயம் மற்றும் பயிரிடுதல் போன்ற பணிகளுக்கு கடன் தரப்படாது.
இந்த திட்டத்தின் கீழ் வணிக நடவடிக்கைகளுக்காக ரூ. 1 லட்சமும், உற்பத்தி மற்றும் சேவைகளுக்கு ரூ. 2 லட்சமும், அதிகபட்சம் 5 பங்குதாரர்களுக்கு ரூ. 10 லட்சமும் கடனுதவி வழங்கப்படும்.
இந்த திட்ட கடனுதவியில் மானியமாக 15 சதவீதம் அல்லது ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.7,500 வரை (இதில் எது குறைவோ) வழங்கப்படுகிறது.
இந்த கடன் உதவி பற்றி மேலும் தகவல் அறியவும், கடன் பெறவும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம். மாவட்டத் தொழில் மையத்தின் முகவரியை தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகங்களில் பெறலாம்.
(கலெக்டர் அலுவலகங்களில் நாம் போய் நின்றால் அவ்வளவு சீக்கிரத்தில் அங்குள்ள ஊழியர்கள் பதில் தந்துவிட மாட்டார்கள். டேபிள் டேபிளாய் அலைய விடுவார்கள். இதனால் உடனே நொந்து போய் வெளியில் வந்துவிடாமல் இத் திட்டத்தின் கீழ் கடன் பெற உங்களுக்கு தகுதியுள்ளதை சுட்டிக் காட்டி, உங்களுக்கும் ரூல்ஸ் தெரியும் என்பதை தெரியப்படுத்தினால் பதில் கிடைக்கும்.
இதே நிலை தான் மாவட்டத் தொழில் மையங்களிலும் இருக்கும். எம்.பி, எம்எல்ஏவிடம் சிபாரிசு கடிதம் வாங்கி வரச் சொல்லி அலைய விடுவார்கள். கடன் கொடுப்பவர்கள் என்பதால் அவர்களிடம் கையை கட்டி நிற்காமல் (இது அரசு தரும் கடனுதவி, யாரும் சொந்தக் காசை தரவில்லை) உங்கள் உரிமையை எடுத்துச் சொல்லலாம். தகுதியிருந்தால் நிச்சயம் கடனுதவி கிடைக்கும். அதே நேரத்தில் கடனை எப்பாடுபட்டாவது முறையாக திருப்பிச் செலுத்துவது வாங்குவோரின் கட்டாய கடமை)