சென்னையில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
சென்னை: சென்னையில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக வீட்டு உரிமையாளர் உட்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள காந்தி நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித் தொழிலாளியான இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், ராமகிருஷ்ணன்(12) என்ற மகனும், புவனேஸ்வரி (6) என்ற மகளும் உள்ளனர். ராஜேந்திரனின் மனைவி மீனாட்சி கண் பார்வையற்றவர்.
ராஜேந்திரனின் மகன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பும், புவனேஸ்வரி 2ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று மாலை இருவரும் பள்ளி முடிந்து வீடு திரும்பிய பின்னர், அனைவரும் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு பெற்றோருடன் தூங்கினார்கள்.
அதிகாலை 3 மணியளவில் ராஜேந்திரன் எழுந்தார். அப்போது வீட்டில் படுத்திருந்த மகள் புவனேஸ்வரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து தேடியும் கிடைக்கவில்லை.
அப்போது வீட்டுக்கு அருகில் புதிதாக கட்டப்படும் ஒரு வீட்டின் உள்ளே புவனேஸ்வரி முகம், மார்பு, முதுகு பகுதியில் நகக்கீறல்களுடன் மயக்க நிலையில் இருந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், புவனேவரியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து டாக்டர்கள் அவரை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மயக்க நிலையில் கிடந்த சிறுமியை யாரோ தூக்கி சென்று
பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புவனேஸ்வரிக்கு தற்போது சுயநினைவு திரும்பியுள்ளது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? என்பது குறித்து உதவி கமிஷனர் லட்சுமி தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜேந்திரன் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் காட்டு ராஜா, அவருடைய உதவியாளர் அய்யப்பன் உட்பட 4 பேர் மீது சந்தேகம் எழுந்தது. இதனால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காட்டு ராஜாவின் வீட்டில் ரூ.500 வாடகை கொடுத்து ராஜேந்திரன் இருந்து வருகிறார். சமீபத்தில் காட்டு ராஜா ரூ.100 வாடகை உயர்த்தினார். இது தொடர்பாக அவர்கள் இருவர் இடையேயும் தகராறு இருந்துள்ளது.
இருவரின் மனைவிகளுக்கு இடையேயும் சண்டை நடந்தது தெரிய வந்துள்ளது. எனவே இதற்கு பழிவாங்கும் வகையில் காட்டு ராஜா இப்படி மோசமாக நடத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். புவனேஸ்வரி மயக்கம் தெளிந்து அடையாளம் காட்டினால்தான் குற்றவாளி யார் என்பது தெரியவரும்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை ராஜேந்திரன் கூறுகையில், எனது வீட்டுக்கு பூட்டு கிடையாது. கயிற்றால் கதவை கட்டி விட்டுதான் படுத்து தூங்குவோம். அதே போல நேற்று இரவும் படுத்திருந்தோம். இரவு 10.30 மணி அளவில் காட்டு ராஜா அவருடைய நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து வீட்டுக்கு அருகிலேயே அமர்ந்து மது குடித்தார். பின்னர் இரவு வெகுநேரம் வரை அவர்கள் சத்தம் போட்டபடி இருந்தனர்.
அவர்கள்தான் என் மகளை நாசம் செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். கதவில் கட்டியிருந்த கயிற்றை அறுத்து விட்டு திறந்து குழந்தையை தூக்கி சென்றுள்ளனர். என் மனைவிக்கு ஆரம்பத்தில் கண் பார்வை இருந்தது. முதல் குழந்தை பிறந்த பிறகு கண் பார்வை மங்கியது. 2வது குழந்தை பிறந்த நேரத்தில் முற்றிலும் கண் பார்வை போய் விட்டது. இதனால் புவனேசுவரி முகத்தை இது வரை என் மனைவி பார்த்தது இல்லை. இந்த நிலையில் இப்படி ஒரு சோகம் நேர்ந்து விட்டது என்றார் அவர்.
பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்கள் கூறும்போது கண் பார்வை இல்லாத மீனாட்சிக்கு புவனேசுவரிதான் கண்போல இருந்து வந்தாள். தாய் வெளியே செல்லும் போது கையை பிடித்து அழைத்து செல்வாள். குழாயில் தண்ணீர் பிடித்து கொடுத்து தாயை கூட்டி செல்வாள். எப்போதும் துருதுருவென ஓடித்திரிந்த இந்த சிறுமிக்கு இப்படி ஒரு கதி நேர்ந்தது மிகவும் வேதனையாக இருக்கிறது என்றனர்.