புதுச்சேரியில் வாலிபர் தீக்குளிப்பால் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே நேற்று இரவு கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு வாலிபர் மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளித்து பரிதாபமாக இறந்தார். தீப்பிடித்து எரிந்த உடலுடன் அங்குமிங்கும் அவர் ஓடியதால் ரயில் நிலையப் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. 35 வயதாகும் இவர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கிருந்து புதுச்சேரிக்கு நேற்ரு வந்தார்.
இரவில் ரயில் நிலையம் வந்த அவர் அங்கு சாலையில் நின்றபடி தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பற்றி எறிய அலறியபடி அங்குமிங்கும் ஓடினார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்தனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சில நிமிடங்கள் தீயின் வெப்பத்தால் அலறித் துடித்து ஓடிய ராஜா உடல் முழுவதும் கருகிய நிலையில் கீழே விழுந்தார். உடனடியாக போலீஸார் விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் நள்ளிரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மரணமடைவதற்கு முன்பு போலீஸில் ராஜா கொடுத்த மரண வாக்குமூலத்தில், தனது குடும்பத்தினர்தான் தனது இந்த நிலைக்குக் காரணம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.