6 தீவிரவாதிகள் கைது - பயங்கர சதி அம்பலம்
லக்னோ: உ.பி. மாநிலத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி சிஆர்.பிஎப் முகாம் மீது நடந்த தாக்குதல், 2005ல் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய 6 லஷ்கர் இ தொய்பா தீவிவாதிகளை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர். மும்பை பங்குச் சந்தையை தாக்கவும் இவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 6 தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயங்கர ஆயுதங்களைக் கையாள்வது, வெடிபொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பயிற்சிகளை அவர்கள் பெற்றுள்ளதாக மாநில டிஜிபி விக்ரம் சிங் கூறினார்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவருக்கு 2005ம் ஆண்டு பெங்களூரில் இந்திய அறிவியல் கழகத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் நேரடித் தொடர்பு உள்ளது. அந்த தாக்குதலில் விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்டார்.
அதேபோல ஜனவரி 1ம் தேதி ராம்பூரில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலிலும் இக்கும்பலுக்குத் தொடர்பு உள்ளது. அந்தத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
பிடிபட்ட 6 பேரில் 3 பேர் ராம்பூரில் கைது செய்யப்பட்டனர். மற்ற 3 பேரும் லக்னோ, சர்பாக் ரயில் நிலையம் பகுதியில் பிடிபட்டனர்.
இவர்கள் இரு பிரிவாக பிரிந்து டெல்லி, ஆக்ரா வழியாக மும்பை செல்லத் திட்டமிட்டிருந்தனர். அங்கு மும்பை பங்குச் சந்தை அலுவலகத்திலும், மும்பை நகரிலும் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக அவர்கள் வைத்திருந்த மும்பை நகர வரைபடமும் சிக்கியுள்ளது.
சர்ச் கேட் மற்றும் மும்பை பங்குச் சந்தையில் அவர்கள் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தனர். அதேசமயம், வேறு முக்கிய நபர்கள், இவர்களின் பட்டியலில் இல்லை என்றும் டிஜிபி விக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டோர் விவரம்:
ராவல்பிண்டி பாகிம் அகமது, குஜ்ரன்வாலா அபு ஜார் (இருவரும் பாகிஸ்தான்), அபு சாமா (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்), முகம்மது ஷரீப், ஜங் பகதூர் (இருவரும் உ.பி.), அபு காசிம் (பீகார்),
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகள், 2 ஏகே 47 துப்பாக்கிகள், ஐந்து கையெறி குண்டுகள், ஒரு பாகிஸ்தான் தயாரிப்பு பிஸ்டல், மும்பைக்கான 2 ரயில் டிக்கெட்டுக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications