நக்ஸல்கள் மீது போலீஸ் எதிர் தாக்குதல் நடத்தாதது ஏன்?: ஜெ
தர்மபுரி: நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியபோது போலீசார் ஏன் எதிர் தாக்குதல் நடத்தவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
தர்மபுரி அருகே அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தி 6 துப்பாக்கிகள் மற்றும் வாக்கி டாக்கியை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் திடீரென்று புகுந்த நக்சலைட் கும்பல் பூட்டப்பட்டிருந்த ஆயுத அறையை வெகு எளிதாக உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த நான்கு 410' மஸ்கட் ரக துப்பாக்கிகள், ஒரு 303' ரக துப்பாக்கி உட்பட ஆறு துப்பாக்கிகள், துப்பாக்கியில் பொருத்தக்கூடிய குத்துவாள், மற்றும் வாக்கி-டாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது.
மேற்படி மர்மக் கும்பலின் தாக்குதலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர், இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மக்கள் நெருக்கடி மிகுந்த சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தக் காவல் நிலையத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பு, நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்களால் காவல் நிலைய அதிகாரிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, காவல் நிலைய அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு ஏதேனும் புகார் கொடுத்தார்களா? அப்படி புகார் ஏதேனும் கொடுத்திருந்தால் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? நடவடிக்கை எடுக்க யாராவது தடையாக இருந்தார்களா?
1998 ஆம் ஆண்டு காட்டுக் கொள்ளையன் வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம், வெள்ளிதிருப்பத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட போது, காவல் துறையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். தற்போது நடைபெற்ற சம்பவத்தில் எதிர் தாக்குதல்கூட காவல் துறையால் நடத்தப்படவில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications