நெல்லையில் புதிய தமிழகம் பேனர் கிழிப்பு-பதட்டம்
நெல்லை:நெல்லையில் புதிய தமிழகம் கட்சியின் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் தேமுதிக பேனரில் இடம்பெற்றிருந்த எம்ஜிஆர் படத்தை அதிமுகவினர் கிழித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு வருகிற 24ம் தேதி மதுரையில் நடக்கிறது. இதற்காக நெல்லை ஜங்ஷன் பகுதியில் அக்கட்சியின் சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
நெல்லை ஜங்ஷன் அண்ணாசிலை அருகே புதிய தமிழகம் கட்சியின் மாநகர அமைப்பாளர் கண்மணி மாவீரன் தனது படத்துடன் கூடிய பேனர்களை வைததுள்ளார்.
இந்நிலையில் யாரோ மர்ம நபர்கள் சிலர் அந்த பேனரில் இருந்த கண்மணி மாவீரன் படத்தை பிளேடால் கிழித்து எறிந்துள்ளனர். இது குறித்து அவர் ஜங்ஷன் போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி பேனரை கிழித்தவர்களை தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.