மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்-தி.வி.க. கோரிக்கை
மதுரை: முல்லை பெரியாறு பிரச்சனையை தீர்க்கக் கோரி 10,000 பேரை திரட்டி போராட திராவிட விழிப்புணர்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது.
மதுரையில் திராவிட விழிப்புணர்ச்சி கழகம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் பி.டி.அரசகுமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
திராவிட விழிப்புணர்ச்சி கட்சி மக்களின் கோரிக்கைகளுக்காக பாடுபடும். எங்களது கட்சியின் கொடியில் சிறு மாற்றம் கொண்டு வந்துள்ளோம். கொடியின் நடுவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படம் பொறித்துள்ளோம்.
மதுரை விமான நிலையத்திற்கு உடனடியாக பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும். இதிலிருந்து அரசு எக்காரணத்தை முன்னிட்டும் பின் வாங்கக் கூடாது. தேவையின்றி காலதாமதம் செய்தால் அதன் விளைவுகளை அரசு அனுபவித்தாக வேண்டும்.
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயத்த வேண்டும். இல்லையெனில் எங்கள் இயக்கம் சார்பில் 10 ஆயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்த டிவு செய்துள்ளோம்.
புதிய கட்சிகளால் கிராமங்களுக்கு தலைவர்கள் செல்லும் நிலை உருவாகியுள்ளது. அதனால் அரசியல் விழிப்புணர்வும், மக்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்றார்.