மும்பை பெண் குற்றவாளியை தப்ப விட்ட தமிழக அதிகாரிகள்
சென்னை: மும்பை போலீஸாரால் கடந்த 2 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் 36 வயது அலமேலு லட்சுமிகாந்த் என்ற பெண்ணை சென்னை விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடித்தனர். ஆனால் போலீஸாரிடம் ஒப்படைப்பதில் அலட்சியமாக இருந்ததால் அந்தப் பெண் தப்பி விட்டார்.
மும்பையைச் சேர்ந்த அலமேலு லட்சுமிகாந்த் (36) அங்கு பல மோசடி வழக்குகளில் தொடர்புடையவர். கடந்த 2 வருடமாக அவர் தலைமறைவாக இருக்கிறார். அவர் வெளிநாட்டுக்குத் தப்பி விடாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலைய குடியேற்றப் பிரிவு அலுவலகங்களையும் மும்பை போலீஸ் உஷார்படுத்தியிருந்தது.
இந் நிலையில் நேற்று இரவு அலமேலு சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் கோலாலம்பூர் செல்ல அவர் வந்திருந்தார். அப்போது அவரைக் கண்டுபிடித்து விட்ட குடியேற்றப் பிரிவு அதிகாரிகள், அவரது டிக்கெட்டை ரத்து செய்தனர். மேலும் அவரைப் பிடித்து தங்களது அலுவலகத்தில் அமர வைத்தனர்.
பின்னர் மும்பை போலீஸுக்கு இதைத் தெரிவித்தனர். அவர்கள், உடனடியாக அலமேலுவை விமான நிலைய போலீஸில் ஒப்படைக்குமாறும், தாங்கள் வந்து சென்னை போலீஸிடமிருந்து அலமேலுவை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் அலமேலுவை விமான நிலைய போலீஸில் ஒப்படைப்பதில் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. படுமெத்தனமாக நடந்து கொண்டுள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட அலமேலு அங்கிருந்து நைசாக நழுவி விட்டார்.
தற்போது அலமேலுவைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.