For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷார்ஜாவில் இந்திய வர்த்தக மையம்

By Staff
Google Oneindia Tamil News

துபாய்: இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே வர்த்தக தொடர்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில், ஷார்ஜாவில் 50 லட்சம் டாலர் செலவில், இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம் அமைக்கப்படவுள்ளது.

இங்கு இந்திய வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களின் நிரந்தர கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இந்தியாவுக்கு வெளியே இப்படி ஒரு நிரந்தர வர்த்தக மையம் அமைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தின் மூலம் இந்தியாவை பொருளாதார சக்தியாக்கும் முயற்சிக்கு மேலும் வலு சேரும்.

இதுதொடர்பான ஒப்பந்தத்தில், ஷார்ஜாவில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில் கவுன்சில் (ஐபிபிசி) மற்றும் ஷார்ஜா வர்த்தக சபையும் நேற்று கையெழுத்திட்டன.

ஷார்ஜா வர்த்தக சபை சார்பில் அகம்மது முகம்மது அல் மிட்பாவும், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் சுதேஷ் அகர்வாலும் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வின்போது இந்தியத் தூதர் வேணு ராஜாமணி, ஐபிபிசி துணைத் தலைவர் கே.வி. சம்சுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த வர்த்தக மையத்திற்குத் தேவையான நிலத்தை ஷார்ஜா அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை மன்னர் ஷேக் சுல்தான் பில் முகம்மது அல் குவாசிமி பிறப்பித்துள்ளார். இந்த மையத்தை நிறுவி நிர்வகிக்கும் பொறுப்பு ஐபிபிசியிடம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தத் திட்டம் குறித்து இந்திய அரசு யோசனை தெரிவித்தது. இதை ஷார்ஜா வர்த்தக சபை ஏற்றுக் கொண்டு இதற்கான முயற்சிகளை எடுத்தது.

20 ஆயிரம் சதுர அடியில் அமையவுள்ள இந்த மையத்தில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் 2 மேல் தளங்களுடன் கூடிய கட்டடம் எழுப்பப்படும். மொத்த கட்டுமான பரப்பளவு 50 ஆயிரம் சதுர அடியாக இருக்கும். இதைக் கட்டி முடிக்க தோராயமாக 50 லட்சம் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு ஆடிட்டோரியம், இந்திய ஹோட்டல் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருக்கும். 2 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிவடையும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X