சோனியா குழப்பத்தில் தேர்தல் ஆணையம்
டெல்லி: சோனியா காந்தியின் எம்.பி. பதவியைப் பறிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து முடிவெடுப்பதில் தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையர்கள் நடத்திய கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
கேரளாவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் மனுவைக் கொடுத்துள்ளார். அதில், பெல்ஜியம் நாட்டின் உயரிய விருதை சோனியா காந்தி கடந்த 2006ம் ஆண்டு பெற்றுள்ளார். இது அந்த நாட்டு அரசியல் சட்டத்தை அவர் ஏற்பதாக அர்த்தம் ஆகிறது.
எனவே எம்.பி. பதவியில் நீடிக்க அவர் தகுதியிழந்து விட்டதாக அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேரள வக்கீல் கூறியுள்ளார்.
இதுகுறித்து சோனியா காந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதா என்பது குறித்து விவாதிக்க 3 தேர்தல் ஆணையர்கள் அடங்கிய கூட்டம் நடந்தது. இதில் நோட்டீஸ் அனுப்புவது தொடர்பாக 3 ஆணையர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
தேர்தல் ஆணையர்களில் ஒருவர் சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்பத் தேவையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஒருமித்த கருத்து எழாததால் எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் பெல்ஜியத்திற்கு சோனியா காந்தி சென்றிருந்தார். அப்போது அந்த நாட்டின் 2வது உயரிய விருதான ஆர்டர் ஆப் லியோபோல்ட் விருது சோனியாவுக்கு வழங்கப்பட்டது. மேலும் கெளரவ டாக்டர் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பெற்றதன் மூலம் பெல்ஜியம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விசுவாசமானவராகி விட்டார் சோனியா. இதன் மூலம் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிக்கும் தகுதியை அவர் இழந்து விட்டார் என்றும் தனது மனுவில் கேரள வக்கீல் கூறியிருந்தார்.
முதலில் இந்த மனுவை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்தார். குடியரசுத் தலைவர் அலுவலகம் இந்த மனுவை தேர்தல் ஆணையத்திற்கு 7 மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.