தேமுதிக பேனரில் எம்ஜிஆர் படம் கிழிப்பு-அனிதா மீது வழக்கு
ஆறுமுகநேரி: காயல்பட்டிணத்தில் தேமுதிகவினரின் டிஜிட்டல் பேனரில் எம்ஜிஆர் படம் கிழிக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உடன்குடியில் கடந்த நாட்களுக்கு முன்பு அதிமுக பொது கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,
எம்ஜிஆர் பிறந்தநாளை கொண்டாடும் உரிமை அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. அதிமுக அல்லாத யாரும் எம்ஜிஆர் படத்தை போட கூடாது. போடும் தகுதியும் அவர்களுக்கு கிடையாது. அவ்வாறு யாராவது எம்ஜிஆர் படத்தை போட்டு தட்டி போர்டோ, டிஜிட்டல் பேனரே வைத்தால் அதில் எம்ஜிஆர் படத்தை அதிமுகவினர் கிழித்தெறியலாம். அதிமுக தொண்டர்கள் மாற்று கட்சி போஸ்டர்களில் உள்ள எம்ஜிஆர் படத்தை கிழிக்கும்போது போலீசார் என் மீது வழககு போடலாம் என்று சவால் விட்டார்.
இந்நிலையில் தேமுதிக மாநில பொறியாளர் அணி செயலாளர் சீனிவாசக ராகவன் திருமணத்திற்காக கோவில்பட்டி வந்த விஜயகாந்தை வரவேற்கும் வகையில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இதில் பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ள போஸ்டரில் எம்ஜிஆர் படம் மட்டும் கடந்த 7ம் தேதி நள்ளிரவு கிழிக்கப்பட்டது. இதைப் பார்த்த தேமுதிக தொண்டர்கள் மாவட்ட தேமுதிக செயலாளர் கோமதி கணேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.
தேமுதிக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கோமதி கணேசன், திருச்செந்தூர் ஓன்றிய செயலாளர் செந்தில்குமார், ஓன்றிய தலைவர் ஊர்ச்செல்வன் ஆகியோர் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தனர்.
அந்த புகாரில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் தேமுதிக பேனரை கிழித்ததாக குறிப்பிட்டுருந்தனர். இப்புகாருக்கு ஆதரவாக அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சு விவரத்தையும் இணைத்திருந்தனர்.
இதுகுறித்த சம்பவம் நடைபெற்ற பின்னர் 5 நாட்கள் கழித்து ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேமுதிக பேனரை கிழித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.