சென்னைக்கு மேலும் 250 பஸ்கள்
சென்னை: சென்னை நகரில் இன்னும் ஒரு மாதத்தில் கூடுதலாக 250 பஸ்கள் இயக்கப்படும் என
போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை கே.கே.நகர் பகுதியில் 200வது திமுக இளைஞர் அணி தொடக்க விழாவில் நேரு பேசுகையில்,
அமைச்சர் ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று இளைஞர் அணியை உருவாக்கினார். அவரது கால்படாத கிராமங்களே இல்லை. ஒரே பகுதியில் 200 இளைஞர் அணியை உருவாக்கி இருப்பது சாதாரண விசயமல்ல.
இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தரும் இயக்கமாக திமுக திகழ்கிறது. இந்த இயக்கத்தை நம்பியவர்கள் யாரும் வீண் போனதில்லை. திமுகவை ஒழிக்க சில கட்சிகள் கங்கனம் கட்டி பார்க்கின்றன.
நடுத்தர, பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு திமுக ஆட்சியில்தான் கிடைத்தது, தொடர்ந்து கிடைக்கும்.
சென்னை நகரில் 2,875 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த ஆட்சியில் 1,800 பஸ்கள் மட்டுமே இயக்கினார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2,550 பஸ்கள் இயக்கப்பட்டுவிட்டன. நிறுத்தப்பட்ட அனைத்து வழித் தடங்களிலும் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இன்னும் 30 நாட்களுக்குள் நகரில் கூடுதலாக 250 பஸ்கள் இயக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் சிலர், வடபழனியில் இருந்து புறப்படும் 5இ பஸ்சை கோயம்பேடு வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று இன்று முதலே அந்த பஸ் கோயம்பேடு வரை இயக்கப்படும் என நேரு அறிவித்தார்.