தமிழகத்தில் 52 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க திட்டம்
நெல்லை: தமிழகத்தில் 52 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க தற்காலிக ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் எல்காட் சார்பில் 500 ஏக்கர் பரப்பில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதில் 100 ஏக்கர் பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணிகளை சிறப்பு பொருளாதார மேம்பாட்டு ஆணையர் விஜயன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கங்கைகொண்டானில் 100 ஏக்கர் பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க தற்காலிக சிறப்பு ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை நாங்கள் பார்வையிட்டு மண்டலம் அமைக்க இந்த நிலம் தகுதியானதுதானா என்பது குறித்து ஆய்வு செயதுள்ளோம். நிலத்தில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா, தனியார் பாதை நிலத்தின் வழியே ஏதாவது செல்கிறதா என்பது குறித்தும் நில வரைபடங்களுடன் ஆய்வு செய்தோம்.
இதுகுறித்த முழு தகவலையும் ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம். நிலத்திற்குரிய ஆவணங்கள் அனைத்தும் இங்கு உள்ளது. நாஙகுநேரியிலும் 1,000 ஹெக்டர் பரப்பளவில் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது.இம்மண்டலம் குறித்த அறிக்கை மூன்று வாரங்களில் தயார் செய்வோம்.
தமிழகத்தில் மொத்தம் 52 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க தற்காலிக ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மண்டலம் பாண்டிசேரியில் அமையவுள்ளது.
27 மண்டலங்களில் ஆய்வு செய்து முறையான அறிவிப்பை வெளியிட்டு விட்டோம். மற்ற இடங்களில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 14 மண்டலங்களில் ஆய்வு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆறு மாதக்காலத்திற்குள் இப்பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.