வக்கீல்கள் மீது தாக்குதல்-டி.எஸ்.பி. மீது வழக்கு
நெல்லை: குற்றாலத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டது தொடர்பாக டிஎஸ்பி உள்பட 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு 12 பேருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகளை பகுதியை சேர்ந்த சன்னியாசி மகன் வேல்சாமி. இவர் தூத்துக்குடியில் வழக்கறிஞராக உள்ளார். கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி தூத்துககுடி வக்கீல்கள் சிலர் குற்றாலத்திற்கு வந்தனர். அவர்களில் வேல்ச்சாமியும் ஒருவர்.
26ம் தேதி அதிகாலையில் இக்னேசியஸ், மார்க்ஸ், பூங்குமார், சாந்த சுரேஷ், கோமதி, மணிகண்டன் ஆகியோர் பழைய குற்றாலத்தில் குளித்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருககும், வக்கீல்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இக்னேசியஸ், பூங்குமார், வேல்சாமி ஆகியோரை போலீசார் தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக தென்காசி டிஎஸ்பி மயில்வாகணன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் குப்புசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகசாமி, கணபதி, ஏட்டு ராஜன், திருவேங்கடம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்பட 12 பேர் மீது நெல்லை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குப்புசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வெங்கடசாமி டிஎஸ்பி மயில்வாகணன், உள்பட 12 பேரும் மார்ச் 19ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு கூறி வர சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.