கருணாநிதி கொடுத்த பட்டா போலியா?
வேலூர்: வேலூரில் அமைந்துள்ள ஸ்ரீபுரம், தங்கக் கோவிலுக்கு எதிரே உள்ள அரியூர் கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு கடந்த 2000மாவது ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரது கையால் கொடுக்கப்பட் மனைப் பட்டாக்கள் போலியானவை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளதால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் திருமலைக்கோடி என்ற இடத்தில் ஸ்ரீபுரம் என்கிற தங்கக் கோவில் சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்தக் கோவிலுக்கு முதல்வர் கருணாநிதி விஜயம் செய்யவுள்ளார்.
இந்த நிலையில் இக்கோவிலுக்கு எதிராக உள்ள அரியூர் கிராம மக்கள் புதிய பிரச்சினையை சந்தித்துள்ளனர்.
அரியூர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு கடந்த 2000மாவது ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால் இந்தப் பட்டாக்கள் போலியானவை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறியுள்ளதால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்த, இக்கிராமத்தில் உள்ள நிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து தாங்கள் முறைப்படி பட்டா நிலங்களில்தான் வசித்து வருவதாக அரியூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளித்து புகார் கூறினர்.
அப்போது அவர்கள் காட்டிய பட்டாக்களை பார்த்த ஆட்சித் தலைவர், இவை போலியானவை என்று கூறியுள்ளார். மேலும், அவர்கள் வசித்து வரும் இடம் அரசு புறம்போக்கு நிலம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், முதல்வராக கருணாநிதி இருந்தபோது 2000மாவது ஆண்டு இந்த பட்டாக்களை அவரது கையால்தான் பெற்றோம். இப்போது அவற்றை போலி பட்டாக்கள் என்று கூறுவது எப்படி என்று கேட்டு ஆட்சித் தலைவரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் அவற்றுக்கு ஆட்சித் தலைவர் சரியான பதிலைச் சொல்லவில்லை.
கருணாநிதி கையால் வாங்கிய பட்டாக்களை ஆட்சித் தலைவர் போலி பட்டாக்கள் என்று கூறியிருப்பதால் அரியூர் மக்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.