விஜயகாந்த் ஆக்கிரமித்த அரசு நிலம்-மீட்கக் கோரி கலெக்டரிடம் புகார்
நடிகர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான பண்ணையான கேப்டன் பண்ணை, மதுராந்தகம் அருகே உள்ள விளாகம், அருங்குணம், முள்ளிமுருக்கஞ்சேரி, தேவாதூர் ஆகிய கிராமங்களில், கிட்டத்தட்ட 402.24 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
இதில் பெருமளவில் அரசு நிலத்தை விஜயகாந்த் ஆக்கிரமித்து விட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் சட்டவிரோதமாக மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் கிளம்பியது.
இந் நிலையில், தேவாதூர் கிராம பஞ்சாயத்துத் தலைவி மீனா ஜெயராமன், மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் கே. மிஸ்ராவைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், விஜயகாந்த்தின் கேப்டன் பண்ணையில், 363.62 ஏக்கர் நிலம் மட்டுமே அவருக்குச் சொந்தமானதாகும். மீதியுள்ள 38.62 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பட்ட நிலமாகும்.
இதில் அரசு புறம்போக்கு நிலம் 26.52 ஏக்கராகும். கல்யாண வரதராஜர் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலம் 4.01 ஏக்கராகும். மேலும் பன்னீர் செல்வம் என்பவருக்குச் சொந்தமான 8.09 ஏக்கர் நிலத்தையும் வளைத்து மொத்தமாக மின் வேலி போட்டுள்ளனர்.
இந்த மின்வேலியைத் தாண்டிச் செல்ல முயலும் ஆடு, மாடுகள் போன்றவை பரிதாபமாக செத்து மடிகின்றன. எனவே அந்த மின்வேலியை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் கூறியுள்ளார் மீனா.