பாகிஸ்தான் ஆயுதங்களை குவிக்கும் இலங்கை
டெல்லி: விடுதலைப் புலிகளை வீழ்த்த பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை வாங்குவதாக இலங்கை அரசு பகிரங்கமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை தூதர் சி.ஆர்.ஜெய்சிங்கே கூறுகையில், இலங்கையில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் எழுந்துள்ளது. இதை நாங்கள் சமாளித்தாக வேண்டும். இந்த சூழ்நிலையில், ஆயுதங்களை வாங்கிக் குவிக்க வேண்டியது அவசியம். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
பாகிஸ்தானிலிருந்தும் நாங்கள் ஆயுதங்களை வாங்கிக் கொண்டிருக்கிறோம். சமீப காலமாக வன்முறைச் சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்து விட்டன.
இதை சமாளிக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் நாங்கள் ஆயுதம் வாங்குகிறோம். எங்களுக்கு வெளியிலிருந்து எந்த ஆபத்தும் இல்லை. உள்ளுக்குத்தான் பேராபத்து இருக்கிறது.
இந்த விஷயத்தில் இந்தியாவின் ஆதரவை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். இந்தியாவின் நல்லெண்ணம் எங்கள் பக்கம் இருக்கிறது. அதில் சந்தேகம் இல்லை.
இந்தியா நமக்கு ஆதரவாக இருப்பதாக இலங்கை மக்களும் எண்ணுகிறார்கள். நாட்டைப் பிளவுபடுத்த இந்தியா அனுமதிக்காது என்றும் இலங்கை மக்கள் நம்புகிறார்கள் என்று கூறியுள்ளார் ஜெய்சிங்கே.
இந்தியா ராணுவ உதவிகளை வழங்க மறுத்து விட்டதால் பாகிஸ்தானிலிருந்து பெருமளவில் ஆயுதங்களை வாங்கி வருவதாக இலங்கை மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது இந்தியாவுக்கே ஆபத்தாக முடியும் எனவும் இலங்கைத் தமிழ் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை வாங்குவது உண்மைதான் என்று இலங்கை தரப்பிலிருந்து முதல் முறையாக பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.