தற்கொலை முயற்சி-காதலி சாவு, காதலன் கைது!
காஞ்சிபுரம்: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தனது காதலிக்கு விஷம் கொடுத்துக் கொன்ற வாலிபர் தானும் விஷம் அருந்தினார். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் ஹஜியா நகரை சேர்ந்தவர் ரஷீத் என்ற ரகுமான் (வயது 30). நகை பாலிஷ் கடை வைத்துள்ளார்.
புதுப்பட்டினம் அருகே உள்ள விட்டிலாபுரத்தை சேர்ந்த சீனிவாசனின் மகள் ஜெயலட்சுமி என்ற பிரேமா (18). பெட்டிக் கடை வைத்துள்ளார்.
அடிக்கடி கடைக்கு ரகுமான் வந்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, வளர்ந்தது. கல்யாணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் மதங்கள் குறுக்கிட்டன.
ரகுமானின் பெற்றோர் கல்யாணத்திற்குத் தடை விதித்தனர். இதனால் மனம் உடைந்தார் ரகுமான். தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
இருவரும் விஷத்தை தண்ணீரில் கலந்தனர். பின்னர் காதலிக்கு முதலில் விஷத்தைக் கொடுத்தார் ரகுமான். பின்னர் தானும் அருந்தினார். இருவரும் மயங்கி விழுந்தனர்.
இருவரையும் செங்கல்பட்டு கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பிரேமா பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், ரகுமான் சிகிச்சை பெற்று வருகிறார்.
காதலியைக் கொன்றதாக தற்போது ரகுமான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் பிரேமாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். ரகுமானை குடும்பத்துடன் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
தகவல் கிடைத்ததும் அங்கு மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வேலியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மங்களபிரியா, சதுரங்கப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தனபால், சுகுணா, கல்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜலாலுதீன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு கூறினார்கள். அப்போது அவர்கள் ரகுமானை கைது செய்ய வேண்டும் என்றனர்.
அதற்கு போலீசார் ரகுமானை கைது செய்து விட்டோம். போலீஸ் காவலில் தான் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கிறோம் என்றனர். இதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.