திமுகவில் இணைகிறது போட்டி மதிமுக!
கரூர்: எல்.கணேசன்-செஞ்சி ராமச்சந்திரன் தலைமையிலான போட்டி மதிமுக, விரைவில் திமுகவில் ஐக்கியமாகப் போகிறது.
கரூரில் போட்டி மதிமுக சார்பில் சேது சமுத்திர திட்டத்தை வலியுத்தி பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய போட்டி மதிமுக பொதுச் செயலாளர் செஞ்சி.ராமசந்திரன், அவைத் தலைவர் எல்.கணேசன் ஆகியோர் கூறியதாவது:
இன்று அரசியலில் இரு அணிகள் உருவாகியுள்ளன. ஒன்று மதவாத அணி. மற்றொன்று மதசார்பற்ற அணி. மதவாத அணிக்கு பாஜக தலைமை வகிக்கிறது. அதற்கு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமை வகிக்கிறார். இதில் ஒரு துரதிஷ்டம் என்ன வென்றால் திராவிட பாரம்பரியம் என்று கூறிக் கொள்ளும் வைகோ அந்த அணியில் உள்ளார் என்பது தான்.
மத சார்பற்ற அணிக்கு தமிழகத்தில் கலைஞர் தலைமை வகிக்கிறார். அந்த அணியில் நாங்கள் உள்ளோம். தன்னை உதைத்த காலுக்கு முத்திமிடுகிறார் வைகோ. ஆனால் நாங்கள் மதிப்பவருடன் கரம் குலுக்கியுள்ளோம்.
திமுகவில் (போட்டி) மதிமுகவை இணைக்க உரிய தருணம் எதிர் நோக்கியுள்ளோம். விரைவில் இணையும் வாய்ப்பு உள்ளது. அதற்கான நாள், நேரம் பின்பு அறிவிக்கப்படும்.
எந்த கொள்கைக்காக மதிமுக உருவாக்கப்பட்டதோ அதை வைகோ அழித்து விட்டார். வைகோ தலைமையில் இருப்பவர்கள் விரைவில் எங்கள் தலைமையில் எங்களுடன் வந்து திமுகவில் இணைந்து விடும் காலம் நெருங்கி வருகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications