படாவியை எதிர்த்து ஓட்டு- தமிழர்களுக்கு ஹிண்ட்ராப் அழைப்பு
கோலாலம்பூர்: மலேசிய பொதுத் தேர்தலில் பிரதமர் அப்துல்லா அகமது படாவி சார்ந்துள்ள ஆளும் கூட்டணிக்கு எதிராக தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தேனேந்திரன் ராமன்குட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேசியாவில் தமிழர்களுக்கு எதிராக படாவி அரசு அடக்குமுறையைக் கையாண்டு வருவதாக அங்கு வசிக்கும் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது. மலாய் இனத்தவர்களுக்கு சமமாக தமிழர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் உரிமைகள் தரப்பட வேண்டும் என தமிழர்கள் கோரி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் இதை வலியுறுத்தி தலைநகர் கோலாலாம்பூரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அதை போலீஸார் அடக்குமுறையாக ஒடுக்கினர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றம் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள், பிரதமருக்கு ரோஜாப் பூக்களைக் கொடுத்து தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்க கூடினர். ஆனால் இந்த முறையும் கண்ணீர்ப் புகைகுண்டுகள வீசியும், தடியடி நடத்தியும் போலீஸார் தமிழர்களைக் கலைத்தனர்.
இந்த நிலையில் மார்ச் 8ம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் படாவி சார்ந்துள்ள தேசியக் கூட்டணிக்கு எதிராக தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து கோலாலம்பூரில் உள்ள கோவிலில் தேனேந்திரன் கூறுகையில், தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரை படாவி அரசு அவமதித்து விட்டது. அவர்களுக்குரிய உரிமைகளைத் தரத் தவறி விட்டது.
ஹிண்ட்ராப் அமைப்பை தீவிரவாத அமைப்பு போல நடத்தி வருகிறது படாவி அரசு. போலீஸாரின் தீவிரக் கண்காணிப்பால் நான் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஹிண்ட்ராப் அமைப்பின் அனைத்து மாகாண ஒருங்கிணைப்பாளர்கள், தேசிய தலைவர்களான மாணிக்கவாசகம், ஜெயதாஸ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை சனிக்கிழமை நடந்த போராட்டத்திற்குப் பின்னர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
வருகிற தேர்தலில் படாவி சார்ந்துள்ள கூட்டணிக்கு எதிராக தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.