புலிகள்- பிற கட்சிகளின் ஆதரவு கோரும் ஜெயலலிதா
சென்னை: விடுதலைப் புலிகள் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப பிற கட்சிக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜெயா டிவிக்கு அவர் அளித்த பேட்டி:
அதிமுக ஆட்சியில் பயங்கரவாதத்தை நான் இரும்பு கரம் கொண்டு அடக்கினேன். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை தலைகீழாகிவிட்டது.
தீவிரவாதிகள், விடுதலைப்புலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. இவர்களுக்கு முதல்வர் மறைமுகமான ஆதரவு கொடுத்து வந்தார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்தவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த தமிழ்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை வெளியிட்டார். சட்டசபையில் பேசிய கருணாநிதி தடா வழக்கு பற்றி சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் விடுதலைப்புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தை வெறும் பேச்சால் ஆதரிப்பது குற்றமாகாது என்று குறிப்பிட்டு இருப்பதாக கூறினார்.
எனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு வெளியான புத்தகத்தை சட்டசபைக்கு கொண்டு சென்று வாசித்துக் காட்டினேன். பொடா சம்பந்தப்பட்ட தீர்ப்பில் விடுதலைப் புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தை வார்த்தைகளால் ஆதரித்தால் குற்றம் ஆகாது என்று அதில் குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக் காட்டினேன்.
உண்மையை நான் வெளிப்படுத்தியதால் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், ஆளும் கட்சியினருக்கும் கோபம் வந்தது. என்னை பேசவிடாமல் செய்ய வேண்டும் என்று எண்ணி, என்னவெல்லாமோ பேசினார்கள்.
விடுதலைப் புலிகள் விஷயத்தில் தமிழக அரசு மென்மையான போக்கை கடை பிடித்து வருகிறது. புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள்-கட்சிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு உடனே விடுதலை செய்யப்படுகிறார்கள். விடுதலைப் புலிகள் அந்த நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்துள்ளனர். அவர்களை இலங்கை தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளாக ஏற்க முடியாது.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசுவது குற்றம் ஆகாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது என்றால், அதை கருணாநிதியால் காட்ட முடியுமா?. விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்ட வைகோ ஜாமீனில்தான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கு இன்னும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
விடுதலைப் புலிகள் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட வேண்டும். இதற்கு நாட்டின் பாதுகாப்பில் நம்பிக்கை உள்ள கட்சிக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications