பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் எஸ்.சி.வி. முறையீடு
சென்னை: எஸ்.சி.வி. கேபிள் டிவி ஆபரேட்டர்களை காவல்துறையினர் மிரட்டுவதை தடுத்து நிறுத்தி, கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜேஷ் தமிழக டிஜிபிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
மேலும் எஸ்சிவி ஆபரேட்டர்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத் தலைவருக்கு அவசரத் தந்திகளையும் அனுப்பியுள்ளனர்.
சன் டிவி குழுமத்திற்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் கட்டமைப்புக்குட்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்களை எந்தக் காரணமும் இன்றி போலீஸார் கைது செய்து வருவது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் கூறினார்.
ஆனால் இந்தப் புகாரை ஆணையர் நாஞ்சில் குமரன் நிராகரித்து விட்டார்.
இந்த நிலையில், எஸ்சிவி நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜேஷ், தமிழக டிஜிபிக்கு ஒரு மனுவை அனுப்பியுள்ளார். அதில், எஸ்சிவி உரிமம் பெற்ற கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எந்தவிதக் காரணமும் இன்றி சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு மிரட்டப்பட்டு வருகின்றனர்.
கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் எஸ்சிவி சிக்னல் வயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
போலீஸாரின் ஒருதலைபட்சமான, அதிகார துஷ்பிரயோக நடவடிக்கை, அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், மனித உரிமைகளை மீறும் வகையிலும் உள்ளது.
இவற்றை தாங்கள் தலையிட்டு தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இல்லையென்றால் உயர்நீதிமன்றத்தை நாடி உரிய நிவாரணம் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.
38 ஆபரேட்டர்கள் அவசரத் தந்தி:
இந்த நிலையில் தி.நகரைச் சேர்ந்த கிஷோர்குமார், கே.கே.நகரைச் சேர்ந்த முரளீதரன் உள்ளிட்ட 38 எஸ்சிவி கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் ஆகியோருக்கு தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு தர உத்தரவிடக் கோரி அவசரத் தந்திகளை அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications