பெட்ரோல், டீசல் பற்றாக்குறையில் தவிக்கும் 7 தமிழக மாவட்டங்கள்
திருச்சி: எண்ணெய் நிறுவனங்கள் சரிவர பெட்ரோல், டீசல் சப்ளை செய்யாமல் இருப்பதால், திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் பற்றாக்குறை தலைவிரித்தாடுவதாக தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
திருச்சியில் இச்சங்கத்தின் சார்பில் நடந்த அசாதாரணக் கூட்டத்தில், திருச்சி மண்டலத்திற்குரிய பெட்ரோல், டீசல் சப்ளையை சீர்படுத்த வலியுறுத்தி, திருச்சி அருகே உள்ள வாழவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிட்டங்கியின் முன்பு, வருகிற 21ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்பி.குமரப்பன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் காப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள், கடந்த சில நாட்களாகவே தேவையான அளவு பெட்ரோல், டீசல் சப்ளை செய்வதில்லை.
இதன் காரணமாக பிப்ரவரி 1ம் தேதி முதல் ஊரகப் பகுதிகளிலும், பிற பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் உள்ள 250 பெட்ரோல் விற்பனை நிலையங்களில், 70 சதவீத பல்க்குகளில் கடந்த 15 நாட்களாக விற்பனை சரிவர நடக்கவில்லை.
ஏழு மாவட்டங்களின் பெட்ரோல், டீசல் தேவை மாதத்திற்கு 44 ஆயிரத்து 160 கிலோ லிட்டர் ஆகும். ஆனால் கடந்த மாதம் 36 ஆயிரத்து 800 கிலோலிட்டர்தான் விற்பனையாகியுள்ளது. இது கடந்த மாதத்தை விட 20 சதவீதம் அதிகம் என்றாலும் கூட வழக்கமான விற்பனையை விட குறைவுதான்.
பெட்ரோல், சப்ளை விநியோகம் தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் படு மெத்தனமாக செயல்படுகிறது. சிக்கல் இருப்பது குறித்து தெரிந்தும் கூட அதை தீர்க்க முயலாமல் மெளனமாக உள்ளனர்.
எங்களது கோரிக்கைகளை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்று பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வராவிட்டால், போராட்டத்ைத மேலும் தீவிரமாக்குவோம். இதுகுறித்து பிப்ரவரி 24ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கவுள்ளோம் என்றார் குமரப்பன்.












Click it and Unblock the Notifications