கொசாவோவுக்கு அமெரிக்கா அங்கீகாரம்
தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வரும் புஷ் இதுதொடர்பாக கொசாவோ அதிபர் பாத்திமிர் செடியுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சுதந்திர கொசாவோவின் நண்பனாக அமெரிக்கா என்றும் திகழும். உங்களது சுக, துக்கங்களில் அமெரிக்கா பங்கு கொள்ளும்.
ஜனநாயகத்திலும், சுதந்திரத்திலும் உயரிய இடத்தைப் பெற கொசாவோ பாடுபடும் என தாங்கள் உறுதியளித்துள்ளீர்கள். அதை அமெரிக்கா மதிக்கிறது. அமெரிக்காவுடன் நீங்கள் தூதரக ரீதியிலான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதையும் அமெரிக்கா வரவேற்கிறது.
உங்களது உணர்வுகளை நாங்கள் முழுமையாக புரிந்து கொண்டுள்ளோம், வரவேற்கிறோம். நல்ல ஆட்சியை நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை அமெரிக்காவுக்கு உள்ளது. புதிய சட்டத்தின் மூலம் அனைத்து மக்களும் சம வாய்ப்புடன் வாழ வழி செய்ய வேண்டும்.
கடந்த 9 ஆண்டுகளில் அமெரிக்கா, கொசாவோ இடையிலான உறவு மேலும் வலுப்பட்டுள்ளது. இருண்ட காலத்திலிருந்து மீண்டுள்ள கொசாவோ, ஜனநாயக சமுதாயமாக உருவெடுத்துள்ளது.
சுதந்திர நாடாக மாறியுள்ள கொசாவோ, பொறுப்பான ஒரு நாடாக இனி செயல்படும் என்று கூறியுள்ளார் புஷ்.
இதன் மூலம் கொசாவோவை முதன் முதலில் சுதந்திர நாடாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவால் கடுப்பான செர்பியா, தனது தூதரை அமெரிக்காவிலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டு விட்டது. மேலும், கொசாவோவுடன் தூதகர ரீதியிலான உறவு வைத்துக் கொள்ளும் பிற நாடுகளுடனான ராஜ்ய ரீதியிலான உறவுகளையும் துண்டிக்கப் போவதாக செர்பியா எச்சரித்துள்ளது.
இதற்கிடையே நேற்று நடந்த ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரக் கூட்டத்தில் கொசாவோ சுதந்திரத்தை அங்கீகரிக்க்க கூடாது என்று ரஷ்யாவும், செர்பியாவும் கூறின. இதனால் ஐ.நாவின் செயல்பாடுகளிலும் பாதிப்பு வரும் என ரஷ்யா எச்சரித்தது.
கொசாவோவில் தற்போது 17 ஆயிரம் நேட்டோ படைகள் உள்ளன. இவற்றில் 1600 பேர் அமெரிக்கர்கள் ஆவர். இந்தப் படையினர் தொடர்ந்து கொசாவோவில் தங்கியிருப்பார்கள் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும், விரைவில் கொசாவோவுக்கு உதவுதற்காக நன்கொடையாளர்கள் மாநாடும் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், கொசாவோவின் வளர்ச்சிக்காக 334.1 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா அறிவிக்கவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு அமெரிக்கா 77 மில்லியன் டாலர் நிதியுதவியை கொசாவோவுக்கு அளித்தது நினைவிருக்கலாம்.