திருச்செந்தூரில் தேரோட்டம்-லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 11ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கானோர் பாத யாத்திரையாக திருச்செந்தூர் வந்தனர்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. முதலாவதாக விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. அது 4 ரத வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்த பின் சுவாமி தேர் இழுக்கப்பட்டது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா கோஷங்களுடன் திரளான பக்தர்கள் தேரை இழுத்தனர். இந்தத் தேர் நிலைக்கு வந்த பின் அம்மன் தேர் இழுக்கப்பட்டது.
தேரோட்டத்தையொட்டி மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகர்கோவில் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் திருச்செந்தூருக்கு இய்கப்பட்டன.
நாளை (வியாழக்கிழமை) இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.
மறுதினம் சுவாமி-அம்பாள் பூந்தேர் சப்பரத்தில் திருவீதி உலாவுடன் மாசித் திருவிழா நிறைவடைகிறது.